மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விருதுக்கு, மாவட்ட அளவில் தேர்வு
செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக,
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது.
நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. இதேபோல், நடப்பாண்டிலும்,
ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற
விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42
பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை,
நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர்
நந்தகுமார் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், இணை
இயக்குனர்கள், மாவட்டதிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர்
இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய,
இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசிய துாய்மைப்பள்ளி விருதுக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட
பள்ளிகளின் பராமரிப்பு, கழிப்பறை துாய்மை, மாணவர்கள் கை கழுவும் முறை என,
பல பிரிவுகளில், ஆய்வு செய்வதோடு, ஐந்து நிமிட வீடியோ பதிவு செய்யப்படும்.
இதில், சிறந்த பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு, தகுதி பெறுவதோடு, தேசிய
அளவிலான போட்டிக்கும் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.