புதுக்கோட்டை
மாவட்டம், அரிமளம் அருகே செங்கீரை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் முன்,
உள்ள குதிரை சிலைகள், தமிழக அரசின் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தமிழ் பாட
புத்தகத்தில் அட்டைப் படமாக இடம் பெற்றுள்ளது.

இது
குறித்து, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்.புதுகை கல்வி மாவட்ட
திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வன் கூறியதாவது:பிளஸ் 1 வகுப்பு
பொதுத்தமிழ் புதிய பாடப் புத்தகம், அச்சுக்கான வடிவமைப்பில் இருந்த போது,
புதிய தமிழ் பாடப்புத்தக பணிகளின் ஒருங்கிணைப்பாளரும், துணை இயக்குநருமான
அருள்முருகன், புத்தகத்தின் அட்டைப்படம், தமிழ் மரபை எடுத்துக்காட்டும்
விதமாக இருந்தால், நன்றாக இருக்கும் என்றார்.சுடுமண் சிற்பக் குதிரைகளை
அட்டைப்படத்தில் வைக்கலாம், என முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து,
புதுகோட்டை மாவட்டத்தில் மிரட்டுநிலை, புலிவலம், ராயவரம் கரைக்கோயில்,
செங்கீரை, சிதலஞ்சன்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள சுடுமண் குதிரை
சிலைகளை படம் எடுத்தோம். மொத்தம், 150 படங்கள் வழங்கப்பட்டதில், செங்கீரை
பகுதியில் உள்ள அய்யனார் கோவில் முன், இருக்கும் குதிரை சிலைகள் தேர்வு
செய்யப்பட்டு அட்டையில் அச்சிடப்பட்டன. அட்டைப்படத்தில் இடம்
பெற்றிருக்கும் இந்த குதிரை சிலைகள், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம்
அருகே, செங்கீரை என்ற கிராமத்தில் அய்யனார் கோவிலின் வடக்கு பக்கம்
காட்டுச்செடிகள் சூழ்ந்திருக்கும் பின்னணியில் நிற்கின்றன. பொதுத்தமிழ்
பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் குதிரைகள், புதுக்கோட்டை
மாவட்டத்தின் தொன்மையான தமிழ் மரபை வெளிக்காட்டுவதாக, அமைந்துஉள்ளது.
தேர்வு செய்த பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன், பாடநுால் கழக துணை
இயக்குனர் அருள்முருகன் ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சார்பில்
நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.