அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு 12 வகையான புதிய
பாடத்திட்டங்கள் தொடங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி,
மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட
பள்ளியைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.அப்போது
விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், `தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை
தனியார் பள்ளிகளுக்கு நிகராகக் கொண்டுவரும் அனைத்து முயற்சிகளையும் அரசு
செய்து வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும்
மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு
லேப்டாப் வழக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஒருமாத காலத்துக்குள்
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் வழக்கப்படும். அதே போல
விலையில்லா மிதிவண்டிகளும் விரைவில் வழங்கப்படும்' என்று பேசினார்.பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு
பொறியியல் படிப்புக்கான மோகம் குறைந்து வருகிறது.
இதன்காரணமாக ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான
புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. அந்தப் பயிற்சியால் படித்து
முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம்
முதல் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்'
என்று அவர் தெரிவித்தார்.







