பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் தற்காலிக பட்டச் சான்றிதழை
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் உடனடியாக கல்விச் சான்றிதழ்
கிடைக்காததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். படிப்பை
முடித்து மூன்று மாதங்களுக்குப் பிறகே அவர்களுக்கு புரொவிஷனல் பட்டச்
சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதிலும்
சிரமம் இருந்து வந்தது.
இந்த நிலையை மாற்றும் வகையில், மாணவர்கள் படிப்பை முடித்த உடன் தற்காலிக
புரொவிஷனல் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம்
செய்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2018
ஏப்ரலில் தேர்வெழுதி பட்டப்படிப்பை முடித்திருக்கும் மாணவர்கள்,
www.unom.ac.in என்ற இணையதளத்திலிருந்து தற்காலிக பட்டச் சான்றிதழை
புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.







