மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளில் காப்பியடித்தலை தடுக்க கல்லூரி,
பல்கலைக்கழக அளவில் சிறப்பு குழுக்களை அமைத்து யுஜிசி
உத்தரவிட்டுள்ளது.பிஎச்.டி, எம்.பில், போன்ற ஆராய்ச்சி படிப்புகளில்
ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பிக்கும்போது அதிக அளவில் காப்பியடித்தல் நடைபெறுவது
தொடர்பான புகார்கள் யுஜிசிக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஆராய்ச்சி
கட்டுரைகள் சமர்ப்பித்தல் போன்றவற்றில் காப்பியடித்தலை தடுக்க கடும்
கட்டுப்பாடுகளை பிறப்பித்து யுஜிசி உத்தரவு வெளியிட்டுள்ளது.
காப்பிடியக்கப்பட்ட அளவு 60 சதவீதத்திற்கும் மேல் எனில் சம்பந்தப்பட்ட
மாணவரின் பதிவு ரத்து செய்யப்படும். ஆராய்ச்சி கட்டுரை திரும்ப
வழங்கப்படும். பணியில் சேர்ந்தவராக இருந்தால் இரு சம்பள உயர்வுகள் நிறுத்தி
வைக்கப்படும். பிற மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு மேற்பார்வை வழங்குதலிலும்
விலக்கு அளிக்கப்படுவர். 40 முதல் 60 சதவீதம் காப்பியடித்தல்
நடைபெற்றிருந்தால் ஒரு ஆண்டுக்கு மாணவர் சஸ்பென்ட் செய்யப்படுவார். பணியில்
சேர்ந்திருந்தால் ஒரு சம்பள உயர்வு ரத்து செய்யப்படும். இரண்டு ஆண்டுகள்
ஆராய்ச்சி மாணவர்களுக்கு மேற்பார்வை அளிக்க இயலாது. தொடர்ந்து புதிய ஆய்வு
விஷயத்தை அவர் சமர்ப்பிக்க வேண்டும். 10 முதல் 40 சதவீதம்
காப்பியடிக்கப்பட்டிருந்தால் ஆறு மாத காலத்திற்குள் புதிய ஆய்வு கட்டுரை
சமர்ப்பிக்கப்பட வேண்டும். பட்டம் பெற்ற பின்னர் காப்பியடித்த தகவல்
கண்டறியப்பட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காப்பியடித்தல் தொடர்ந்து
மேற்கொண்டால் பணியில் இருந்து நீக்கம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. இது
தொடர்பாக யுஜிசி கூறியிருப்பதாவது:
* ஆராய்ச்சி விஷயங்களில் காப்பியடித்தல் நடைபெறுவதை தடுக்க
கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனித்தனியே குழுக்கள் அமைக்க
வேண்டும்.
* முதலில் டிப்பார்ட்மென்டல் அகாடமிக் இன்டகிரிட்டி பேனலுக்கு முதலில்
புகார் அளிக்க வேண்டும். புகார் ஆராயப்பட்டு 45 நாட்களில் இது
இன்ஸ்டிட்யுஷனல் அகாடமிக் இன்டகிரிட்டி பேனலிடம் வழங்கப்படும். இந்த
அமைப்பும் 45 நாட்களில் புகார் தொடர்பான அறிக்கையை கல்வி நிறுவனத்திடம்
அளிக்கும்.
* துறை தலைவர், துறைக்கு வெளியே உள்ள மூத்த கல்வியாளரும், காப்பியடிப்பதை
கண்டறிய தொழில்நுட்ப வசதியை பற்றி தெரிந்திருக்கும் மற்றொருவரும்
துறைரீதியான கண்காணிப்பு குழுவில் இடம்பெற வேண்டும்.
* எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சி, கட்டுரைகள், வெளியீடுகள்
போன்றவற்றில் காப்பியடித்தல் கண்டுபிடிப்பதற்கான சாப்ட்வேர் வசதி
ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும்போது
இது தனது சொந்த கண்டுபிடிப்பு என்பதற்கான உறுதிமொழி அவர்களிடம் வழங்க
வேண்டும். ஆராய்ச்சிக்கு மேற்பார்வையாளராக விளங்குகின்ற நிபுணரும்,
ஆராய்ச்சியாளர் அளித்த கட்டுரையில் காப்பியடித்தல் இல்லை என்றும், இது அவர்
சுயமாக கண்டறிந்தது என்றும் சாட்சியம் அளிக்க வேண்டும்.
* பல்லைக்கழகங்கள் முதுகலை பட்டம் மற்றும் பிஎச்டி பட்டம் வழங்கிய பின்னர்
ஒரு மாதத்திற்குள் தொடர்புடைய ஆராய்ச்சி தாள்கள் யுஜிசியின்
‘இன்பிளிப்நெட்’ என்ற வெப்சைட்டுக்கு வழங்க வேண்டும். இது ஆராய்ச்சி
தாள்களின் சேகரிப்பான ‘சோத் கங்கா’ என்ற தகவல் சேகரிப்பு மையத்துடன்
சேர்க்கப்படும்.