சேலம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சேலத்தில் 1,080 சிறுவர், சிறுமிகள்
கிருஷ்ணர் வேடமணிந்து அணிவகுத்து நின்று உலக சாதனை நடத்தினர்.
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் சேலம் ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில்1,080
குழந்தை கிருஷ்ணர்கள் பங்கேற்கும் சர்வம் கிருஷ்ணமயம் நிகழ்ச்சி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மூன்று வயது முதல் 12 வயதுடைய
குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் கிருஷ்ணன் வேடம் அணிவித்து சாதனை
நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர்.
இதற்காக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1,080 மாணவ, மாணவிகள் கிருஷ்ணர்
வேடமிட்டு புல்லாங்குழல், கிரீடம் அணிந்து வந்து பள்ளி வளாகத்தில்
அணிவகுத்து நின்றனர். பின்னர் உலக சாதனை நிகழ்ச்சியாளர்களான ரெக்கார்ட்
அகாதெமி, எலைட் உலக சாதனை, லிம்கா புக் ஆப் ரெக்கார்ட், இந்தியன்
ரெக்கார்ட் ஆப் அகாதெமி, தமிழன் புக் ஆப் அகாதெமி ஆகிய சாதனை நிறுவனங்களின்
நடுவர்கள் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமிகள் 1,080
பேரும் வேட்டி உடுத்தி, உடல் முழுவதும் நீலச் சாயம் பூசிக் கொண்டு, தலையில்
கீரிடம் சூடி, கைகளில் புல்லாங்குழல் பிடித்து வாசித்தபடி கிருஷ்ணர்
பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அசத்தினர். ஸ்ரீ
வில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி ஸ்ரீ செண்ட அலங்கார
செண்பகமன்னார் ஜீயர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சரவணன்,
தென் பாரத அமைப்பாளர் நாகராஜன், மாவட்டத் தலைவர் மணி, ஆர்.எஸ்.எஸ். வட
தமிழ்நாடு தலைவர் கே.குமாரசாமி, ஜெய்ராம் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த
ராஜேந்திரபிரசாத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நளினி ஆகியோர் முன்னிலையில்
இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து சிறுவர், சிறுமிகளின் இந்த சாதனை நிகழ்ச்சி உலக சாதனை
பட்டியலில் இடம் பெற்றதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடுவர்கள் மேடையில்
அறிவித்தனர்.
உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் அனைவரும் சிறப்பான
மகிழ்ச்சியான முகபாவனையுடன் பங்கேற்றதாகவும் இந்த நிகழ்ச்சி உலக சாதனை
நிகழ்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் அறிவித்து நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் க.சரவணன் கூறியது:
ஏற்கெனவே 797 சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர் வேடமணிந்து உலக சாதனை நிகழ்ச்சி
நடத்தி இருந்தனர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக கோகுலாஷ்டமி
தினத்தில் 1,080 குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து வந்து, கிருஷ்ணர்
பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக் காட்டினர்
என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
கூறுகையில், இந்த உலக சாதனை நிகழ்ச்சி தன்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதுவரை
இதுபோன்ற நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வந்து, கிருஷ்ணர் பாடலுக்கு ஏற்ப
ஆடி, பாடி மகிழ்ந்தது மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக, இந்த
நிகழ்ச்சிக்காக தானே ஒரு பாடலை எழுதி இசையமைத்து இருக்கிறேன் என்றார்








