ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்திலுள்ள,
அனைத்து அரசு நடுநிலை மற்றும் துவக்க பள்ளிகளில்,
'ஆர்.ஓ., வாட்டர்' இயந்திரம் பொருத்தி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனைமலை ஒன்றியத்தில், 68 அரசு துவக்க
பள்ளிகள், 17 நடுநிலை பள்ளிகள் என மொத்தம், 85 பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான
பள்ளிகளில் ஒன்றிய நிர்வாகம், தன்னார்வலர்கள், எம்.எல்.ஏ., தொகுதி
வளர்ச்சி நிதியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக, 'ஆர்.ஓ., வாட்டர்'
இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது.'ஆர்.ஓ., வாட்டர்' இயந்திரம் குடிநீரை
சுத்திகரிப்பு செய்து வழங்குவதால், குடிநீரால் தொற்றுநோய் ஏற்படுவது
தவிர்க்கப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் மாணவர்கள் காய்ச்சலால்
பாதிக்கப்படுவது குறைந்துள்ளது.இந்நிலையில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில்
இன்னமும் 'ஆர்.ஓ., வாட்டர்' இயந்திரம் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால்,
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது.
இதை
தவிர்க்க, ஆனைமலை ஒன்றிய நிர்வாகத்தினர், அனைத்து பள்ளிகளிலும் 'ஆர்.ஓ.,
வாட்டர்' இயந்திரம் பொருத்த, வால்பாறை எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை
வைத்துள்ளனர்.ஆனைமலை ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து பள்ளிகளிலும்,
'ஆர்.ஓ., வாட்டர்' இயந்திரம் பொருத்த திட்டமிட்டு, பள்ளிகள் குறித்து
கணக்கெடுத்து வருகிறோம். இயந்திரம் பொருத்துவதற்காக, வால்பாறை
எம்.எல்.ஏ.,விடம் நிதி கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்தால், அரசு துவக்க
பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பொருத்தப்படும்,' என்றனர்.







