ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளம் பெற்று
பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. பள்ளி
கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு
பேணி காக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமுடையவர்களாக சிறந்து
விளங்குகிறார்கள். மாணவர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து
விளக்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு மாணவ-மாணவிகளை
பெற்றோரே விரும்பித்தான் அனுப்புகிறார்கள். இதுபற்றி பள்ளிகளுக்கு அறிவுரை
எடுத்து கூறப்படும்.
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளம் பெற்று
பணிபுரிகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக்க
ஏற்பாடு செய்யப்படும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ-
மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.இவ்வாறு அமைச்சர்
செங்கோட்டையன் கூறினார்.