
பசிபிக் பெருங்கடலில் புதிதாக எல் நினோ ஒன்று உருவாகியுள்ளது. அமெரிக்க
அரசின் ஒரு அங்கமான தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National
Oceanic and Atmospheric Administration) இதைக் கடந்த வியாழக்கிழமை
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் சில காலத்துக்கு இதன் பாதிப்பு
இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை எல் நினோவினால் இந்தியாவிற்குப் பாதிப்பு குறைவாகவே
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் தற்பொழுது
தோன்றியிருக்கும் எல் நினோ சற்று பலவீனமானதாகவே இருக்கும் எனக்
கணிக்கப்பட்டிருப்பதால் விளைவுகளும் சற்று குறைவாகவே இருக்கும் என்றே
எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எல் நினோ தோன்றினால் அதன் பாதிப்பு
குறைந்தபட்சம் ஒன்பது மாதங்கள் முதல் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை
நீடிக்கலாம்.
இந்த காலகட்டத்தில் ஒரு வேளை மழை கொட்டித் தீர்க்கக்கூடும்
அல்லது கடும் வறட்சி நிலவக்கூடும். எதுவாக இருந்தாலும் எல் நினோவால்
இந்தியாவிற்கு என்ன விதமான பாதிப்புகள் இருக்கும் என்பதை ஓரளவுக்குத்தான்
கணிக்க முடியுமே தவிர உறுதியாக என்ன நடக்கும் என்பதை யாராலும் கூற
முடியாது. ஏனென்றால் இயற்கை எப்போதும் மனிதனின் சிந்தனைகளுக்கு
அப்பாற்பட்டது.







