சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் மட்டுமே, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி இருந்தது.நகராட்சிகள், ஊராட்சிகளில், நேரடியாகவே விண்ணப்பித்து, சான்றிதழ் பெறும் நிலை இருந்ததால், பொதுமக்கள் அவதியடைந்ததுடன், லஞ்சமும் அதிகரிக்க துவங்கியது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, http://crstn.org என்ற, இணையதளத்தில் பெறும் வகையில், புதிய சேவையை, முதல்வர், இ.பி.எஸ்., சமீபத்தில் துவக்கி வைத்தார்.இதனால், தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், இணையதளத்தில் இருந்து, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியும்.அதேநேரம், எந்த ஆண்டில் பிறந்தவர்களுக்கு சான்று பெற முடியும் என்ற கேள்வி, மக்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இணையதள சேவையில், 2018 ஜன., 1 முதல் பிறந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்த சான்றிதழ்கள் மட்டுமே, பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கு முன், பிறந்தவர்கள், இறந்தவர்கள் குறித்த விவரங்கள் படிப்படியாக, இணைய தள சேவையில், பதிவேற்றம் செய்யப்படும். இந்த பணிகள் முடிந்தால் தான், அனைத்து ஆண்டுகளுக்கான சான்றிதழ்களையும் பெற முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.








