
பொதுத்தேர்வுப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர்கள்
விடுப்பு எடுக்க பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
இதையடுத்து வரும் 6-ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும், 14-ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
தேர்வுக்கான பணிகளில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்
ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு விதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஆலோசனைக்
கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உத்தரவு
வழங்கியுள்ளனர்.
அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும்,
பொதுத் தேர்வு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். தேர்வு
முன்னேற்பாட்டு கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
மாவட்ட அதிகாரிகள் ஒதுக்கும் இடங்களில், தேர்வுப் பணிக்குச்
செல்ல வேண்டும். தேர்வுப் பணியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,
தற்செயல் விடுப்பு, அவசர விடுப்பு போன்றவற்றை எடுக்கக் கூடாது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு
பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என
அறிவுரை வழங்கி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.