💧💧நாட்டில் 3.6 கோடி மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றனர். பள்ளிக்கல்வியை முடித்தவுடன் கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேரும் மாணவர்கள் பலர் புதிய கல்விச்சூழலை எதிர்கொள்வதில் சிரமப்படுகின்றனர். உயர்கல்வியில் தவறும் மாணவர்களால் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வரை தங்கள் கல்வியை முன்னெடுக்க முடிவதில்லை. உயர் கல்விக்கான புதிய சூழலை எதிர்கொள்ளுதல் ஆசிரியர்களுடன் நல்லுறவு பேணுதல் பொறுப்புள்ள குடிமகனாக உருவாகுதல் உட்பட நோக்கங்களை மாணவர் பெறும் வகையில் தீக்ஷாரம்ப் என்ற புதிய வழிகாட்டி திட்டத்தை பல்கலை மானியக்குழு வகுத்துள்ளது.
திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் அளிக்கும்படி பல்கலை துணைவேந்தர்களை யு.ஜி.சி. சேர்மன் டி.பி.சிங் அறிவுறுத்தியுள்ளார். பழகுதல், தொடர்புகொள்ளுதல், ஆளுமைத்திறன் வளர்த்தல், அனுபவம் பெறுதல் ஆகிய நான்கு அம்சங்களை மாணவர்கள் பெற வேண்டும்.
கல்வி பொருளாதாரம் உளவியல் ரீதியான பிரச்னைகளை மாணவர்கள் சந்திக்கும்போது தனது துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ வழிகாட்டிகளை எளிதாக அணுகும் வகையில் மாணவன் பயிற்சி பெற வேண்டும். இருபது மாணவர்களுக்கு ஒரு சீனியர் மாணவர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பன உட்பட அறிவுறுத்தல்களை இத்திட்டத்தின் கீழ் யு.ஜி.சி. பட்டியலிட்டுள்ளது.