நாடு முழுவதும் ஊரடங்கு அமலில்
இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகளின் இயக்க நேரம்
குறித்து மாநில அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,
‘தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்க
அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம்
ஆய்வு செய்தார். இந்த கூட்டத்துக்குப்பின் தமிழக அரசு வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில்
மார்ச் 31-ந் தேதிவரை பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவும் மற்ற
கட்டுப்பாடுகளும் ஏப்ரல் 14-ந் தேதிவரை நீட்டிக்கப்படுகின்றன. ஊரடங்கு
உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான
அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ்
அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் இப்
பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
பல
கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள்,
சுய உதவிக்குழுக்கள் ஆகியவை தினசரி அல்லது வாராந்திர அல்லது மாத வட்டி
மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும்
வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உடனடியாக நிறுத்தி
வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல்
நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.
பெரிய
காய்கறி மார்க்கெட் அல்லது சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக
கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி அல்லது பழ வகைகளை விற்கும் கடைகளை
விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும்.
அங்கு
சமுதாய விலகல் முறைகளின்படி மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க
வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும்
சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
அதிக
மக்கள் வாழும் குடிசை மாற்று குடியிருப்புகள், பொது மக்கள் அதிகம் கூடும்
வழிபாட்டு தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது
தீயணைப்பு எந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.
இந்த
நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய்
என்பதையும், இது மனித சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தவல்லது என்பதையும்,
மக்கள் உணரும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதனையும்,
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஒலி பெருக்கி அல்லது தண்டோரா மூலம் பொது
மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலம் வீடு
வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கர்ப்பிணிப்
பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்.ஐ.வி. தொற்று உள்ளோர்
போன்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பெறுகின்றனர்.
அவர்களுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட
வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி
மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி
அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் உதவி மையம்
அமைக்கப்படும்.
இது தொடர்பான கோரிக்கைகள்
இருந்தால், அவற்றிற்கான அத்தியாவசிய சான்றிதழை மாவட்ட கலெக்டர் மற்றும்
சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.
மருத்துவப்
பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், அரசு
மருத்துவமனை முதல்வர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை
இயக்குநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குனர்கள் ஆகியோர்
வழங்குவர்.
அத்தியாவசியப் பொருட் களை நகர்வு
செய்யும் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு
அல்லாத தனியார் பணியாளர்களுக்கும், சென்னை உட்பட அந்தந்த மாவட்ட
கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், சம்பந்தப்பட்ட காவல் துறை
அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின்
வணிக நிறுவனங்களான (இகாமர்ஸ்) குரோபர்ஸ், அமேசான், பிக் மார்க்கெட்,
பிலிப்கார்ட், டங்சோ போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள்,
மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும்,
அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும்,
வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது.
சொமாட்டோ,
ஸ்விக்கி, ஊபர், ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும்
தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான
தடை தொடரும். ஆனால், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும்
தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ் மற்றும் சிறு சமையலகங்கள் மூலம்
ஏற்கனவே தங்கள் உணவுகளை பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி
வழங்கப்படுகின்றது.
அதேபோன்று, காய்கறி, பழங்கள்,
முட்டை போன்ற விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற
நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள்
வழங்க வேண்டும். வேளாண் விளை பொருட் களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும்
எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படுகிறது.
கால்நடை,
கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும்
அனுமதிக்கப்படுகிறது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், காவல் துறை தலைமையக
கட்டுப்பாட்டு அறையை 044- 28447701, 044-28447703 ஆகிய எண்களில் 24 மணி
நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
முதியோர், நோயாளிகள்,
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ்
சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் 108
எண்ணை தொடர்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இச்சேவையையும் இணைந்து
செயல்பட வேண்டும்.
அரசால் அறிவிக்கப்பட்ட
சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளை சென்றடைவதையும், இவை வழங்கும்போது
சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக
பின்பற்றுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும்,
அந்தந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்றவாறு, தேவைப்பட்டால் நிவாரணத் தொகை
மற்றும் பொருட்களை அவரவர் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாவட்ட
கலெக்டர்கள் ஏற்பாடு செய்யலாம். நோய்த் தொற்றினை தடுக்கும் விதத்தில், கை
ரேகை பதிவு செய்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை தற்போது முற்றிலும்
தவிர்க்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வந்த
சுமார் 54 ஆயிரம் பேரின் பட்டியல் மாவட்ட கலெக்டர்களிடம்
வழங்கப்பட்டுள்ளது. இவர்களை, அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும்.
அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.
கொரோனா
தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி
வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குடும்பத்தினர் வெளியில் வருவது முற்றிலுமாக
தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை
மாவட்ட கலெக்டர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இந்த அனைத்து நடவடிக்கைகளும், பொது
மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்
எடுக்கப்படுபவை. இதனை உணர்ந்து, அரசின் உத்தரவுகளை பொது மக்கள் தவறாது
தீவிரமாக கடைபிடித்து, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
“விழித்திரு,
விலகி இரு, வீட்டிலேயே இரு” என்ற கோட்பாட்டை இந்த சவாலான நேரத்தில்
பொதுமக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்
என்று இந்த கூட்டத்தின் மூலம் முதல்- அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








