பிளஸ் 2 பொது தேர்வில், முக்கிய பாட தேர்வுகள் தொடர்ந்து கடினமாக உள்ளதால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பிளஸ்
2 பொது தேர்வு, மார்ச், 2ல் துவங்கியது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம்
அமலானது. அதேபோல, 'ப்ளூ பிரிண்ட்' முறை நீக்கப்பட்டு, வினாத்தாள்
தயாரிக்கப்பட்டது. மொழி பாடத்தாளும் இரண்டில் இருந்து, ஒன்றாக
குறைக்கப்பட்டது. இத்தனை மாற்றங்களுக்கு பின், நடத்தப்படும் தேர்வு
என்பதால், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும், இந்த
ஆண்டு தேர்வு, பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில்,
பிளஸ் 2வுக்கான முதல் நாள் தேர்வான தமிழ் மற்றும் மொழி பாடங்களில்
வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்தது. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற
முடியும் என, மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்து வந்த தேர்வுகளில்,
மாணவர்களுக்கு கடும் சோதனையான, வினாத்தாள்களாக அமைந்துள்ளன.ஆங்கில
தேர்வில், ஒன்று, இரண்டு, மூன்று மதிப்பெண் கேள்விகளில் பெரும்பாலானவை, பாட
புத்தகத்தில் இல்லாதவை என, பல மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல,
கணித தேர்வில், 35 மதிப்பெண்களுக்கு மிகவும் சிக்கலான கேள்விகள் இடம்
பெற்றுள்ளன.அதனால், பல மாணவர்கள் தேர்ச்சி பெறுவதே கடினமாக உள்ளதாக,
பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.விலங்கியல் தேர்விலும், வணிகவியல் தேர்விலும்
கூட, சிக்கலான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக,
புத்தகத்தில் பாடத்தின் பின்பக்க கேள்விகள் இடம் பெறாவிட்டாலும், குறைந்த
பட்சம், பாடங்களில் உள்ள அம்சங்களில் இருந்தாவது, கேள்விகள் இடம்
பெற்றிருக்க வேண்டும். மாறாக, வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வு போல,
வினாத்தாள் அமைந்துள்ளதால், பள்ளி படிப்பை மட்டுமே படித்துள்ள, பிளஸ் 2
மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க, திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும்
நாட்களில் நடத்தப்படும், வேதியியல், உயிரியல், இயற்பியல், பொருளியல், கணித
பதிவியல் போன்ற தேர்வுகளின் வினாத்தாள்களும் எப்படி இருக்குமோ என,
மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.