சென்னை மாநகராட்சி சார்பில் 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்க ஆன்ட்ராய்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தற்போது 9 ம் வகுப்பு முடித்து, 10 ம் வகுப்பிற்கு செல்ல உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5,000 பேருக்கு, 'ரெட்மி நோட் 5' என்ற ஆன்டிராய்டு மொபைல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 11 ம் வகுப்பு முடித்து, 12 ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கும், அடுத்த வாரம் ஆன்டிராய்டு மொபைல்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கின்ற வரை, மாணவர்களுக்கு, 'ஜூம் செயலி' வழியாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.ஏற்கனவே மாணவர்கள் வீடுகளில் அதிக நேரம் செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு செல்போன் வழங்கியிருப்பது மாணவர்களை படிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து முன்வைக்கப்படுகின்றது.








