கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளனர். எல்.ஐ.சி., உட்பட, பொதுத்துறை நிறுவனத்தினரும் பாதிப்படைந்துள்ளனர். எல்.ஐ.சி., முகவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வருமானம் இல்லாத சூழல் உருவானது.முகவர்களுக்கு பண்டிகை காலத்தில், முன்பணம் வழங்கப்படும். பின்னர், அந்த பணம் பிடித்தம் செய்யப்படும்.
அதேபோல், தற்போது முகவர்களின் பணிக்காலம், வணிகம் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களுக்கு, எல்.ஐ.சி., நிறுவனம், தலா, 50 ஆயிரம் ரூபாய் வரை, முன்பணம் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள, 6.50 லட்சம் முகவர்களுக்கு, எல்.ஐ.சி., நிறுவனம், வட்டியில்லாமல், 2,700 கோடி ரூபாய், முன்பணம் வழங்கி உள்ளது. இத்தொகை, 25 மாதங்களில், முகவர் கமிஷனில் பிடித்தம் செய்யப்படும்.








