தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை
கட்டுப்படுத்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், மாஸ்க்,
சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால்,
இந்த கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்காததன் விளைவாக கொரோனா
பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும்
34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சென்னையில் மட்டும் 24 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை வைத்து பார்க்கும் போது மாநிலத்தில் நான்கில் 3 மடங்கு சென்னையில் தான்
நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து தினமும்
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தினமும்
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந் நிலையில்,
கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் இந்த 4 மாவட்டங்களில் ஐஏஎஸ்,
ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து சென்னையில் 5
அமைச்சர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சர்கள்
குழுவினர் மூலம் தற்போது கட்டுபடுத்தும் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் சகஜமாக திரிவதால்
பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் வடசென்னையில் முழு ஊரடங்கை
அமல்படுத்த வேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழக
அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதே நேரத்தில், கொரோனா பாதிப்பை
கட்டுபடுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்
முழு ஊரடங்கை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான்
பாதிப்பை கட்டுபடுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு
செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது அதன் அடிப்படையில் கடந்த 5 ம் தேதி வரை தமிழகத்தில்
மொத்தமாக எத்தனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ள என்ற அறிவிப்பை தமிழக
அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்பேரில் தற்போது, சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர்,
கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மொத்தமாக 316
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.என மொத்தம் 306
கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே
நேரத்தில் தேனி, மதுரை, கரூர், சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, திருப்பூர்
கோயமுத்தூர், சேலம், திருவாரூர், நீலகிரி, நாமக்கல், தர்மபுரி,
கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம்
உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது
என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.