'அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சல்வார் கமீஷ் மற்றும்
சுரிதார் அணிந்து வந்தால் கட்டாயம் துப்பட்டா அணிந்து வர வேண்டும்' என
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் உடை நாகரிகம் தற்போது மாற்றம் அடைந்துள்ளது. சேலை அணிந்து வந்த
பெண்கள், வேட்டி அணிந்து வந்த ஆண்கள் நவ நாகரிக உடைகளை அணியத் துவங்கி
உள்ளனர். 'பேஷன்' என்ற பெயரில் அரைகுறை ஆடை அணிவது அதிகரித்து வருகிறது.இதை
தவிர்க்க அரசு ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழக
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு வரும் போது சுத்தமான
நல்ல உடைகளை அணிந்து வர வேண்டும்.
பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் சேலை, சல்வார் கமீஷ், சுரிதார்
ஆகியவற்றை அணிந்து வரலாம். சல்வார் கமீஷ், சுரிதார் உடன் துப்பட்டா அணிந்து
வர வேண்டும். ஆண் ஊழியர்கள் பேன்ட், சட்டை அணிந்து வர வேண்டும்; சாதாரண
உடையில் வருவதை தவிர்க்கவும். நீதிமன்றம் மற்றும் விசாரணை கமிஷனுக்கு
செல்லும் அதிகாரிகள் 'கோட்' மற்றும் 'டை' அணிந்து செல்ல வேண்டும்.
பெண் அலுவலர்கள் சேலை, துப்பட்டாவுடன் சல்வார் கமீஷ், சுரிதார் அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.








