கோல்கட்டா; கொரோனா தடுப்பூசி மருந்தை முதன் முதலாக மனிதர்களிடம் செலுத்தும் பரிசோதனைக்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சிரஞ்சித் திபார் என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் பணியுடன், ஆர்.எஸ்.எஸ்., தொண்டராகவும் உள்ள இவர், கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு தொடர்பாக, 'பாரத் பயோடெக்' நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் திட்டத்தில் பங்கேற்க, ஓரிரு தினங்களில் ஒடிசா செல்ல உள்ளார்.
இதை அவர், 'பேஸ்புக்'கில் தெரிவித்துள்ளார். அதில், 'ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட நான், கொரோனா தடுப்பூசி மருந்தை, மனித உடலில் செலுத்தும் பரிசோதனையில் பங்கேற்க உள்ளேன்.
இந்த நாட்டிற்காக என் உடலை தானம் செய்ய முடிவெடுத்துள்ளேன்' என, கூறியுள்ளார்.இவர், கடந்த ஏப்ரலில், 'தடுப்பூசி மருந்து பரிசோதனைக்கு தயார்' என, தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவரை பரிசோதனைக்கு வருமாறு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில், 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.அதுபோல, 'சைடஸ் கெடிலா' நிறுவனமும், 'சைகோவ் - டி' என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனங்களின் தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளன.அத்துடன், பரிசோதனை மேற்கொள்ள, 12 மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.