பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்... பல பிரச்சனைகள்... வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது... தூங்கமுடியவில்லை... எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி.....என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்...
அப்போது மாலை நேரம். முனிவர் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன? என பார்த்துவிட்டு வா" என்றார்.சென்றவன் திரும்பி வந்து... 100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.
நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்.
100 மாடுகளும் படுத்து தூங்கவேண்டும், அதுதான் முக்கியம். சரியா?...
இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.
சரி அய்யா, என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு.. கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.
"ஏன்?என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.
"100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை...!!
சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன...!! சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்...!!
ஆனால் அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்கவைக்க முடியவில்லை....!!!
சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன...!!
அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!
அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்...!
முனிவர் சிரித்தபடியே...
● இதுதான் வாழ்க்கை.!
வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...
□ சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.
□ சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்...
□ ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...
○ அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...
○ பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..
○ தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் என்றார்...
முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்து வந்து முனிவரிடம் என்னால் தீர்க்க முடிந்த "சில பிரச்சினைகளை தீர்த்து விட்டேன், தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன்...
இப்போதும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.. என்றான்...
● கதை சொல்லும் நீதி....
○ வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...
○ அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.
○ ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது.
○ அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.
○ ஆகவே சிலவற்றை இறைவனை பிரார்த்தித்து... அவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்..
◇ வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம்தான் காரணம்...
◇ மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க தேவையில்லை.
என்ற பழமொழிக்கேற்ப...
எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்குத் தக்க விளைவுகள் வந்துகொண்டே இருக்கிறது. என்ற உண்மை ஞானத்தை அனைவரும் அறிந்து கொண்டாலே செய்யும் செயலில் விழிப்புணர்வு ஏற்பட்டு வாழ்க்கையில் இன்பம் வர ஆரம்பித்துவிடும்.
◇ நமக்கு வரும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் நம்முடைய செயல்தான் காரணமாக இருக்கிறது.
♡ நன்மையை நாம் செய்தால் நன்மையே நமக்கு வருகிறது.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்...
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அறிவோம்... தெளிவோம்...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...