சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை
பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு
அமலில் இருக்கிறது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளி, கல்லூரிகளை
திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆன்லைன் வாயிலாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு
வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளின் படி, வரும் 21ம் தேதி முதல் 9-12ம்
வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின்
ஒப்புதலின் பேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று
தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளிகளில் மாணவர்கள்,
ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக
அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிக்கல்வி ஆணையர்
தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த
நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு
பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது தெரிவித்துள்ளது.
கொரோனா
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது குறைவான நாட்களே இருக்கும் என
தெரிவித்தது. மேலும் கணிசமாக பாடத்திட்டங்களை குறைக்கும் பணியில் SCRET
ஈடுபட்டிருந்ததாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. பொதுத்தேர்வுக்கு
தயார்படுத்தும் நிலையில் பாடத்திட்டம் உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த
சூழலில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் மாணவர்களின் விருப்பத்தின் பேரில்
பள்ளிகளில் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் முடிவை பின்பற்றி நடக்கத் தான் அதிக
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.