
தமிழகத்தில் செப்.30-ம் தேதியுடன் 8-ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி, 29-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதிஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதஇறுதியில் 8-ம் கட்டமாக செப்.1முதல் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. தற்போது, பொது போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 30-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது.
வழக்கமாக, ஊரடங்கு முடிவுறும் காலத்தில் அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்தும் தளர்வுகள் அளிப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி, அதன்பின் அறிவிப்புகள் வெளியிடுவார்.
அந்த வகையில், வரும் 29-ம் தேதி தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, இ-பாஸ் ரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டன. வரும் அக். 1-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் போக்குவரத்து, தனியார்பேருந்து போக்குவரத்து மட்டுமேதற்போது முழுமையாக இயங்காமல் உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் பொது முடக்கம் அவசியமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அண்மையில் கூறியுள்ளார். கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.