

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''கோவிட்-19 தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு 29.09.2020 அன்று தொடங்கவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத ஏற்கெனவே சேவை மையங்கள் வாயிலாக (Service Centre) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தற்போது http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் Hall Ticket-ல் க்ளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும். அதில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது''.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.