வரும் கல்வியாண்டில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் படிப்புகளை அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியிலேயே கற்க வழிவகை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை மாணவர்கள் விரும்பினால் தங்கள் தாய்மொழியிலேயே படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் தாய்மொழியில் பயிலும் நடைமுறையை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் பயிலும் நடைமுறையை உருவாக்க ஐஐடி, என்.ஐ.டி. அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை புதிய வினாத்தாள்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தொழில்நுட்ப கல்வியை அவரவர் தாய்மொழியில் படிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைகழகத்தில் சில பொறியியல் பிரிவு பாடங்கள் தாய்மொழியில் படிக்கும் வசதி உள்ளபோதிலும் மாணவர்கள் அதில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது.








