
புது டில்லி: இந்திய மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்க உள்ளது. இதற்காக 'கோ-வின்' எனும் செயலி உருவாகப்பட்டுள்ளது. இதில் சர்க்கரை, இதய நோய் உள்ளவர்கள் தாங்களே பதிவு செய்யும் வசதி உள்ளது. பைசர், பாரத் பையோடெக், சீரம் இந்தியா ஆகிய மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சில வாரங்களில் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும். தடுப்பூசி திட்டம் எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டது. தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது பற்றி சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது: தடுப்பூசி தேவைப்படும் ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி கிடைக்கும்.
ஒரு கோடி சுகாதார ஊழியர்கள், இரண்டு கோடி முன்கள பணியாளர்கள் மற்றும் 27 கோடி முன்னுரிமை வயதினர் உள்ளனர். கோ-வின் செயலி தடுப்பூசி அளிப்பவர்கள், பெறுவர்கள் போன்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். முதல் கட்டமாக அனைத்து சுகாதார நிபுணர்கள், இரண்டாம் கட்டத்தில் துப்புரவு, போலீஸ் போன்ற முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும். மூன்றாம் கட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடைய நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
என கூறினார். ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும். தடுப்பூசி போட்ட பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும். க்யூ ஆர் சான்றிதழும் உருவாக்கப்படும். எத்தனை தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டன, எத்தனை பேர் கலந்து கொண்டனர், எத்தனை பேர் வெளியேறிவிட்டார்கள் போன்ற அறிக்கைகளும் செயலியில் உருவாக்கப்படும். தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன கிடங்குகளின் வெப்பநிலையையும் நிகழ்நேரத்தில் செயலி அனுப்பும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.








