வரும் திங்கள்கிழமை(டிசம்பர் 7) முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து வரும் டிச. 7-ம் தேதி முதல் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் வரும் 7 ஆம் தேதி முதல் இறுதியாண்டு கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஹோட்டல் மேனேஜ்மேண்ட் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் கல்லூரி விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும். மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









