தனிநபர்கள் 2019 - 20ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை ( டிசம்பர் 31) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு அவகாசத்தை நீட்டித்துள்ளது.
முன்னதாக
கொரோனா பாதிப்பு காரணத்தை காட்டி மத்திய அரசு, வருமான வரி கணக்கு தாக்கல்
செய்ய காலஅவகாசத்தை பலமுறை நீட்டித்திருந்தது. இதனால் டிசம்பர் 31ம்
தேதிக்கு பின்னர் நீட்டிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
அதேநேரம் நிதியச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபு உள்பட பல்வேறு தரப்பினர், 2019-20ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதையடுத்தே 2019 - 20ம் ஆண்டிற்கான தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது நிறுவனங்கள் தாக்கல் செய்ய பிப்வரி 15ம் தேதி வரை அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலை கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, 4.37 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது. தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் தாக்கல் செய்வார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. நாட்டில் 135 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் 5 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். அதாவது ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார்கள்.
முன்னதாக, வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அலர்ட் செய்து வந்தது. அதாவது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படி செய்யாவிட்டால் கால தாமதம் செய்ய வேண்டாம். அதோடு வருமான வரி தாக்கலை இன்றே செய்திடுங்கள் என்று கூறியிருந்தது.









