நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர் ஒருசில இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை.
எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 9,69,047 கல்லூரி மாணவர்க நாள்தோறும் 2 ஜி.பி டேட்டா கார்டு இலவசமாக பெறமுடியும்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்த இணையவழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள்( டேட்டா கார்டுகள்) வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த டேட்டா கார்டுகளை எங்கு பெறுவது போன்ற விவரங்கள் இடம்பெறவில்லை. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.