மாணவர்கள் நலன் கருதி அந்தந்த பள்ளிகளிலேயே பிளஸ்-2 பொதுத்தேர்வு- பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
மாணவர்கள்
நலன் கருதி அந்தந்த பள்ளிகளிலேயே பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக
ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை உயர் அதிகாரி
கூறினார்
கொரோனா தொற்று பரவல்
காரணமாக பிளஸ்-2 தேர்வு தாமதமாக தொடங்குகிறது. மார்ச் மாதத்தில் தொடங்க
வேண்டிய தேர்வு மே மாதம் 3-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதக்கூடிய
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கடந்த மாதம் 19-ந்தேதி
தொடங்கப்பட்டதை தொடர்ந்து 2 மாதம் தாமதமாக பிளஸ்-2 தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகம்,
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு சுமார் 8.5 லட்சம் மாணவ-மாணவிகள்
எழுதுகிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல்
தயாரித்து தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன்
அடிப்படையில் தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு பணிகளை மேற்பார்வையிடும்
அலுவலர்கள் போன்றவற்றை தயார்படுத்தும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாகி
உள்ளது.
வினாத்தாள் தயாரிக்கும் பணி, தேர்வு
மையங்கள் அமைத்தல் போன்ற முக்கிய பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. கொரோனா
தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அரசு
வலியுறுத்தி வருவதால் பள்ளிகளிலும், தேர்வு மையங்களிலும் அதனை கண்டிப்பாக
பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.
பள்ளி திறந்து ஒரு
மாதம் ஆகியுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் நோய் தொற்றில் இருந்து
பாதுகாப்பாக இருப்பதை கல்வித்துறை உறுதி செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து
எதிர்வரும் பிளஸ்-2 தேர்வை பாதுகாப்பாக நடத்தவும் மாணவர்கள் பயம், பதட்டம்
இல்லாமல் தேர்வு எழுதவும் தேவையான முன்ஏற்பாடுகளை செய்யவும் தேர்வுத்துறை
திட்டமிட்டுள்ளது.
சமூக இடைவெளியுடன் மாணவர்கள்
தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கவும், ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள்
வீதம் அமர வைக்கவும், ஒரு பெஞ்சிற்கும் மற்றொரு பெஞ்சிற்கும் இடையே போதிய
இடைவெளி விடவும் ஆலோசித்து வருகிறது.
மாணவர்கள்
நலன் கருதி தேர்வு மையங்களை அதிகப்படுத்தவும், தேர்வுத்துறை பரிசீலித்து
வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது பிளஸ்-2
தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட்டது.
அதுபோல
தற்போது நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது. அந்தந்த பள்ளியிலேயே
தேர்வு எழுதினால் வகுப்பறை இடப்பிரச்சினை ஏற்படாது. சமூக இடைவெளியும்
முறையாக பின்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தற்போது
கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த போதிலும் முன்எச்சரிக்கை தடுப்பு
நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதில் தேர்வுத்துறை உறுதியாக உள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொரோனாவுக்கு
முந்தைய காலம் வரை 3100 பிளஸ்-2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று தாக்கம் இருந்ததால் அந்தந்த பள்ளிகளில் தேர்வு
எழுத அனுமதிக்கப்பட்டது. அதனால் இந்த எண்ணிக்கை 6 ஆயிரமாக
அதிகரிக்கப்பட்டது.
இந்த வருடம் தொற்று குறைந்து
இருந்தாலும் மாணவர்கள் நலன் கருதி தேர்வு மையங்களை அதிகப்படுத்த
திட்டமிட்டுள்ளோம். தேர்வுக்கு இன்னும் 2 மாத காலம் இருப்பதால் உயர்மட்ட
மருத்துவ குழுவின் ஆலோசனை பெற்று அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுத
அனுமதிக்கலாமா? அல்லது தேர்வு மையங்களை அதிகரிக்கலாமா? என்பதை முடிவு
செய்வோம்.
தேர்வு கூடத்தில் போதிய இடைவெளி,
காற்றோட்டமும் இருக்க வேண்டும். தேர்வு பணியில் கூடுதலாக ஆசிரியர்கள்,
ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.








