தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றியும், அதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக டிஜிபி திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பிரதமர் பேசும்போது, ‘தற்பொழுது கொரோனா உச்சநிலை அடைவது மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாக்கிக் கொண்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட மாநிலங்களில் கடந்தாண்டு தொட்ட உச்சத்தை ஏற்கனவே தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு நிர்வாகத்தில் அனைத்து துறையினரும் எவ்வாறு ஒருங்கிணைந்து கொரோனா தொற்று பரவலை சமாளித்தோமோ அதே வேகத்தில் தற்போதும் செயல்பட்டு பணியாற்ற வேண்டும்” என்றார். தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று விகிதம் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது ஏப்ரல் 2021ல் சராசரியாக தினமும் 3900 பேருக்கு புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதி முதல் இதுவரை, விதிகளை மீறியதாக 1,36,667 பேர் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.2,88,90,600 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 31,26,036 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 3,61,000 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34,87,036 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு காலவரையறைக்குள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்குமேல் உள்ள அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணியையும் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் 14 முதல் 16 வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், இன்று முதல் வருகிற 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும். கொரோனா தொற்று 2வது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...