என்னதான் ஊரடங்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டாலும், நாம் ஒவ்வொருவரும், மற்றவரிடமிருந்து அன்னியப்படுத்தப் பட்டுவிட்டோம் என்பதே உண்மை..!
நண்பர்களோடு குலவும் அந்த சுதந்திரம், இனிவரும் காலங்களில் தொடருமா, என்பதும் கேள்விக்குறியே..!
உறவுகளின் சுபநிகழ்வு கொண்டாட்டங்கள் இனி முன்போல் சாத்தியமா என்பதும் ஐயமே..!
ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருந்தவர்களின் பொருளாதார நிலையினைவிட, மன அழுத்தம் மிக பாரம்.
என்றாவது ஒருநாள், வீட்டிலேயே அமர்ந்து, நினைத்ததையெல்லாம் திருப்தியாக சாப்பிட முடிகிறதா ?, என அன்றொருநாள் அலுத்துக் கொண்டிருந்த நாம், இன்று வீட்டிலேயே இருந்தும், உணவின் பக்கம் மனம் செலுத்த இயலவில்லை என்பதும் நிதர்சனம்.
நெருங்கிய உறவுகளின் உயிர் இழப்புகள் தந்த அழுத்தம் நீங்குவதற்குள், அடுத்தடுத்து என ஆயிரம் அதிர்ச்சிகள் வரிசைகட்டி காத்திருக்கின்றன, எதிர்காலம் பற்றிய எண்ணத்தில்.
பள்ளிக்குச் செல்லாமலே தேர்ச்சியடையும் மாணவர்கள் முகத்தில், மகிழ்ச்சியினை தேடவேண்டித்தான் உள்ளது.
வீட்டிற்குள், வார்த்தைகள் குறைந்துபோய், அலைபேசிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. முகம் பார்த்து பேசுவதைக் கூட, முடிந்தவரை தவிர்த்து விடுகிறோம் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். நான்கு சுவர்களுக்குள் நாற்பதுவித சிந்தனைகள்.
உண்பதும், உறங்குவதும் மட்டுமே வாழ்க்கை என்றாகி விடாது. தினம் ஒரு போராட்டத்தினை, பிரச்சினைகளின் வடிவில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, உடனிருந்த அந்த தெம்பும், உற்சாகமும், இன்று எது பிரச்சினை என்பதை யோசிப்பதிலேயே காணாமல் போய்விட்டன.
வீசும்போதுதான் காற்று அழகு.
கொட்டும்போதுதான் அருவி அழகு.
பயணமோ, பணியோ, தேவையோ என ஏதாவது ஒன்றின் பொருட்டு இயங்கிக் கொண்டிருக்கும் வரைதான், மனித வாழ்க்கை அழகு.
ஒரு பெருந்தொற்று நோயால் முடக்கப் பட்டிருக்கிறோம், நாளை எப்படியும் நகர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்.
முதல் அலையில் முடிந்தவரை சமாளித்தோம்.
இரண்டாம் அலையில், இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சந்தித்து விட்டோம்.
மூன்றாம் அலையில் முழுமையாக முடங்கிப் போகாமல் இருப்பது, நமது கையில்தான் உள்ளது.
தளர்வுகள்தான் அறிவிக்கப் பட்டுள்ளதே தவிர, நோயாளிகளின் எண்ணிக்கைதான் குறைந்துள்ளதே தவிர, நோயின் தீவிரம் அல்ல.
கவனத்தோடு இருக்கச் சொல்வது, நாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.
நாம் படைக்கப்பட்டதன் காரணத்தினை, நமக்கான கடமைகளை, முழுமையாக முடிக்கவும்தான்.
வெறுமையான, விரக்தியான பார்வையே, வாழ்வில் நிரந்தரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்..!
அவரவர் மனம் அறியும்,
அழுத்தத்தினையும், வெறுமையினையும்..!
வாய்விட்டு சிரித்தது கடைசியாய் எப்போது என்றொரு கேள்விக்கான பதிலை மட்டும் தேடுங்கள், போதும்..!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...