திரும்பத் திரும்ப படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்வெழுதச் செல்லும் கடைசி மாதங்களில் திரும்ப படித்தல் (Revision) குறைவாக இருக்க வேண்டும்.
பயிற்சி ரீதியாக சென்றுவிட வேண்டும் அப்போதுதான், தேர்வை துல்லியமாகவும், வேகமாகவும் எழுதும் திறன் அதிகரிக்கும்" என்று நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவர் திரிதேவ் விநாயகா கூறியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தமிழக அளவில் மதுரையைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா முதலிடத்தையும், தேசிய அளவில் 30-வது இடத்தையும் பிடித்தார். தமிழக அளவில் முதலிடம் பிடித்தது குறித்து மாணவர் திரிதேவ் விநாயாக கூறியது: "நான் ரொம்ப கடினமாக உழைத்தேன். அந்த கடின உழைப்புதான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது.
முதலில் இருந்தே ஒருநாள் விடாமல் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான ரிசல்ட் தெரியாமல் இருந்தாலும், நாம் நிலையாக இருந்தாலே நாம் இலக்கை அடைந்துவிடலாம் என்று எனக்கு புரிந்தது.
கண்டிப்பாக திரும்பத் திரும்ப படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்வெழு செல்லும் கடைசி மாதங்களில் திரும்ப படித்தல் (Revision) குறைவாக இருக்க வேண்டும். பயிற்சி ரீதியாக சென்றுவிட வேண்டும் அப்போதுதான், தேர்வை துல்லியமாகவும், வேகமாகவும் எழுதும் திறன் அதிகரிக்கும். நான் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான பாடப்பிரிவைத் தேர்வு செய்யப்போகிறேன்" என்று அவர் கூறினார்.
முன்னதாக நடந்து முடிந்த நீட் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர். இதில், 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.