ஏரலில் பஸ்சில் மூதாட்டி தவறவிட்ட நகையை மீட்டு பள்ளி ஆசிரியையிடம் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டினர்.
ஏரல்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடம், மிக மோசமாக இருந்ததால் புதிய
கட்டிடம் கட்டுவதற்காக பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து
இப்பள்ளி மாணவிகள் ஏரலில் இருந்து பஸ் மூலம் சிறுத்தொண்டநல்லூர் அரசு
முத்துமாலை அம்மன் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று இவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பறையில் பாடம் படித்து வருகின்றனர்.
இந்நிலையில்
மாணவிகள் வழக்கம்போல் காலையில் சிறுத்தொண்டநல்லூருக்கு ஏரலில் இருந்து
பஸ்சில் சென்ற போது பஸ்சில் ஒரு பை கிடப்பதை மாணவிகள் மைக்கேல் சாதனா,
பவித்ரா தேவி பார்த்து எடுத்துள்ளனர். அதில் தங்க நகை இருப்பதை பார்த்த
மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா மேரியிடம் நடந்ததை கூறி பையை
ஒப்படைத்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியை ஏரல் காவல் நிலையத்தில் அந்த நகையை
ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை நடத்தி நகையை தவற விட்ட ஏரல்
சேர்மன் கோயில் தெரு லெட்சுமியிடம் 2.5 பவுன் நகையை ஒப்படைத்தனர். மேலும்
மாணவிகள் மைக்கேல் சாதனா மற்றும் பவித்ரா தேவியை ஏரல் போலீஸ் எஸ்ஐ
சண்முகசுந்தரம் அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா மேரி, பெற்றோர் ஆசிரியர் கழக
தலைவர் வில்சன் வெள்ளையா, பொருளாளர் புஷ்பம் ரமேஷ், போலீசார் ஜெகஸ்டின்
ராஜ்குமார், ஈஸ்வரமூர்த்தி, சரவணக்குமார், செந்திலா ஆகியோர் கலந்து
கொண்டனர்.