தமிழ்நாட்டில் பெரும் படிப்பு படித்த இளைஞர்கள் மத்தியிலும் அரசுப் பணிகளுக்கு என்று தனியிடம் இருக்கத்தான் செய்கிறது.
உதாரணமாக, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் இளநிலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 13,919 ஆகவும், முதுநிலை மாணவர்களின் எண்ணிக்கை 4,903 ஆகவும் உள்ளன. அதே சமயம், 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 339 ஆக மட்டுமே உள்ளது. எனவே, பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த கல்வித் தகுதியுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு தேர்வர்கள் பெரிய அளவில் தேர்ச்சி பெறுவதில்லை என்பது தெரியவருகிறது .

பொதுவாக, குரூப் 4 வினாத்தாள் பட்டயப்படிப்புத் தரத்தில் சற்று எளிதாக இருந்தாலும், போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதால், தேர்வின் தன்மை கடினமாகிவிடுகிறது. எனவே, தாகம், விடாமுயற்சி, தியாகம் என்பதைத் தாண்டி அரசு தட்டச்சுத் தேர்வு./ கணினிதிறன் தேர்வு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
அரசு தட்டச்சுத் தேர்வு:
எப்படியாவது அரசுத் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி திறன் ஆகியவற்றிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். மத்திய அரசானாலும் சரி/ மாநில அரசுகளானாலும் சரி/ இந்திய உச்ச நீதிமன்றமானாலும் சரி/மாவட்ட நீதிமன்றங்களானாலும் சரி தட்டச்சர் (Type-writer)/சுருக்கெழுத்தர் (Short hand) இல்லாமல் இயங்க முடியாது.
எஸ்எஸ்சி தேர்வாணையம் வெளியீடும் பெரும்பாலான காலிப் பணியிடங்களுக்கு தட்டச்சர்/சுருக்கெழுத்தர் தகுதி மிக முக்கியமானதாகும். சமீபத்தில் வெளியான 7301 குரூப் 4 காலியிடங்களில், கிட்டத்தட்ட 3000 இடங்களுக்கு தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை செயலக பணியில் ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பதவிக்கான சம்பள ஏற்றமுறை ரூ. 56,100-2,05,700 வரையாகும். இதற்கும், தட்டச்சச் சான்றிதழ் இருந்தால் தான் விண்ணப்பிக்க முடியும்.
அதேபோன்று, அரசுத் துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் (CERTIFICATE COURSE IN COMPUTER ON OFFICE AUTOMATION) ஆக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் பணிகளுக்கு கணினி சான்றிதழ் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.
எனவே, தட்டச்சுச் சான்றிதழ் மற்றும் அரசு கணினி சான்றிதழ் வைத்திருப்பது உங்களுக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அரசு தட்டச்சு/சுருக்கெழுத்தர் - (பிப்ரவரி/ஆகஸ்ட் ) கணினி திறன் தேர்வை (ஜூன்/டிசம்பர்) நடத்தி சான்றிதழ் வழங்குகிறது.
தட்டச்சர்/சுருக்கெழுத்தர் தேர்வுக்கு நீங்கள் உங்கள் அருகில் உள்ள தட்டச்சுப் பயிலகங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வை எழுதலாம். இல்லை, நீங்கள் தனித்தேர்வராகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பாகும்.
அதேபோன்று, அரசு கணினி சான்றிதழ் தேர்வு எழுதுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சில் இளநிலை தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு, அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் 044 - 22350525,22351018, 22350618,22351423,22351015,22350520 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
Certificate Course in Computer on Office Automation
Directorate of Technical Education
Tamilnadu Typewritting- computer Institute's Associtation









