அட இந்த வகுப்பே வித்தியாசமா இருக்கே என்று கேட்டதற்கு, அந்த ஆசிரியர் அளித்த பதில் இன்னும் வித்தியாசமாக இருந்தது. மாணவர்களின் படிப்போடு நற்பண்பினை வளர்க்க, விஸ்வசேவா கல்வி அறக்கட்டளை, சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோல நற்பண்பு வகுப்புகளை நடத்துகிறது" என்கிறார், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்.
புத்தகத்தில் உள்ளவற்றில் இருந்து கற்றுக்கொள்வது பள்ளிப் பாடம். எனக்குள் இருப்பவற்றை நானே உணர்ந்து என்னையே கற்றுக்கொள்ள வைப்பது இந்த நற்பண்பு பாடம்’ என்கிறார், மாணவர் அருணாசலம். எனக்கு ரொம்ப கோவம் வரும் சார். வீட்லயும் சரி, ஸ்கூல்லயும் சரி என் கோபத்தைக் காட்டிடுவேன். இந்த வகுப்புக்கு வந்ததிலருந்து கோபம் குறைஞ்சிடுச்சு. பிரெண்ட்ஸ்ங்க அதிகமாயிட்டாங்க. நல்லா படிக்கவும் செய்யறேன்" என்கிறாள், மாணவி வர்ஷா.
உண்மையிலேயே சொல்லப்போனால், இந்த வகுப்பால் முதலில் பண்பட்டது நான்தான். எனது கோபங்கள் குறைந்துபோனது" என்றார், இப்பள்ளியில் நற்பண்பு வகுப்பை நடத்தி வரும் பகுதிநேர ஓவிய ஆசிரியை மோகனா. இந்த நற்பண்பு வகுப்பின் சிறப்பே அவர்களுக்கு நாம் ஏதும் கற்பிக்காமல், அவர்களின் மனதில் உள்ள பண்புகளை வெளியே கொணர்வதுதான். கேள்வி கேட்பதன் மூலம் அவர்களின் தரப்புப் பதில்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளும் பண்பு, உண்மையை உரக்கச் சொல்லும் பண்பு ஆகியவை வளர்ந்துள்ளன. கூட்டு முயற்சி, குழு விவாதம், உண்மையாய் இருத்தல் போன்ற நற்பண்புகள் எங்கள் மாணவர்களிடையே வளர்ந்துள்ளன" என்கிறார், விருகம்பாக்கம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நற்பண்பு வகுப்புகளை நடத்தி வரும் பகுதி நேர இசை ஆசிரியை சுபஸ்ரீ.
சென்னை மாநகராட்சியில் உள்ள 286 பள்ளிகளில் தற்போது 55 பள்ளிகளில் உள்ள, 6,7,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரம் ஒரு முறை நற்பண்பு வகுப்புகளை, மாநகராட்சியின் அனுமதியோடு நடத்தி வருகிறோம். மேலும் 100 மாநகராட்சிப் பள்ளிகளில் நற்பண்பு வகுப்புகளை நடத்த அனுமதி தந்துள்ளார் மேயர் சைதை துரைசாமி" என்கிறார், இந்த அமைப்பில் பயிற்சியாளராக இருக்கும் பாலாஜி.








