பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக
உள்ளன. இந்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முன்பிருந்த நடைமுறை போல
அட்டவணையிடப்பட்ட மதிப்பெண் பட்டியலாக பள்ளிகளுக்கு அளிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு
மையங்களில் பள்ளிகளுக்கு அட்டவணையிடப்பட்ட மதிப்பெண் பட்டியல், தேர்வு
முடிவு வெளியாகும் நாளில் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு இந்த பட்டியலை
பள்ளிகளில் ஒட்டி வைக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் சில, மிகவும் தொலைவில் உள்ளன.
அங்கிருந்து பட்டியலை வாங்கி வருவது சிரமமாக உள்ளது என பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதவிர பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு தனியாக தேர்வு முடிவுகளை அனுப்பவும் முதன்மைக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி கூறியது:
இந்த ஆண்டில் பள்ளிகளுக்கு அட்டவணையிடப்பட்ட மதிப்பெண் பட்டியலாக
தேர்வு முடிவுகள் வழங்கப்பட உள்ளன. மின் தடை, இணையதள வசதி இல்லாதவர்கள்
தாங்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று எந்தவித காலதாமதமுமின்றி தேர்வு
முடிவுகளை அறியும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர தேர்வு முடிவுகளை இணையதளத்திலும், பள்ளிகளின் இ-மெயிலுக்கும்
தனியாக அனுப்பி வைக்கப்படும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில்,
பள்ளிகளின் தொலைவிற்கேற்ப குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சீலிடப்பட்ட
பட்டியல் வழங்கப்படும். அந்த பட்டியலை காலை 10 மணிக்கு சரியாக பிரித்து
தேர்வு முடிவுகளை பள்ளிகளில் ஒட்டிவைக்க வேண்டும் என்றார்.
பிளஸ் 2வில் மாநில அளவில் ரேங்க் பெற்றவர்கள் விவரத்தை, சென்னை அரசு
தேர்வுகள் துறை அறிவித்துவிடுவது வழக்கம். ஆனால், மாவட்ட அளவில் ரேங்க்
பெற்றவர்கள் விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் தெரிந்து கொள்ள பிற்பகல்
ஆகிவிடுகிறது. மாவட்ட அளவில் ரேங்க் பெற்றவர்களின் விவரத்தை, சென்னையிலேயே
தொகுத்து கொடுத்தால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என
ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.