பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் 394 பேருக்கு பணி:
பள்ளிக் கல்வித் துறையில் பணியின் போது காலமான 394
ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவுகளை
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வியாழக்கிழமை வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3 நாட்களுக்கு முன்பு
அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக
பேரவையில் அந்தக் கட்சியின் கொறடா கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழச்சி தலைமைச் செயலகத்தில்
நடைபெற்றது. பணிக் காலத்தில் காலமான ஆசிரியர்கள், நூலகர்கள், அமைச்சுப்
பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான
நியமன உத்தரவு 388 பேருக்கும், மூன்றாம் நிலை நூலகர்கள் பணிக்கான உத்தரவு 6
பேருக்கும் என மொத்தம் 394 பேருக்கு கருணை அடிப்படையிலான உத்தரவுகளை
முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 34 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை அவர் அளித்தார்.
பேரவையில் நன்றி: கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்ட
செய்தியை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கொறடா கே.பாலகிருஷ்ணன் சட்டப்
பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் பேசியது:
பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையிலான பணி வழங்க வேண்டுமென
கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம்
கோரிக்கை மனுவை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அளித்தோம். ஆனால், எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது, முதல்வர் ஜெயலலிதாவிடம் மூன்று தினங்களுக்கு முன்பு அதே
கோரிக்கையை வைத்தேன். இவ்வளவு சீக்கிரம் அதைப் பரிசீலித்து நடவடிக்கை
எடுத்து அதற்கான உத்தரவுகளை வழங்குவார்கள் என நானே எதிர்பார்க்கவில்லை.
இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பாலகிருஷ்ணன்.