அறிவிக்கப்பட்ட அரசு கல்லூரியை திறப்பதில் தாமதம்: மாணவர்கள் தவிப்பு-தினமலர்
உத்திரமேரூர் அரசு கலை கல்லூரியில், சேர்க்கைக்கான அனுமதி கிடைத்தும், வகுப்புகள் துவங்காததால், 250 மாணவர்கள் வெறுமனே கல்லூரிக்கு வந்து திரும்பிக் கொண்டு இருக்கின்றனர்.மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில், அரசு கலை கல்லூரி இல்லாததால், காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், செங்கல்பட்டு, செய்யார் ஆகிய இடங்களில் இயங்கி வரும் கலை கல்லூரிகளுக்கு சென்று, பயில வேண்டிய சூழ்நிலை உள்ளது.
காஞ்சிபுரத்தில், அரசு கலைக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும்
என, கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த
நிலையில், காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூரில் நடப்பாண்டிலேயே, அரசு கலை
கல்லூரி திறக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜனவரியில் அறிவித்தார்.
இதையடுத்து, அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு
செய்யும் பணியில், ஐந்து மாதங்களாக அதிகாரிகள் ஈடுபட்டு, உத்திரமேரூர்
அடுத்த திருப்புலிவனத்தில், 20 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டனர்.
மேய்க்கால் புறம்போக்கான இந்த இடம், வனத் துறைக்கு சொந்தமானது. இதையடுத்து,
இந்த இடத்தை கையகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.
ஆனால், மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு மாற்று இடம் தர
வேண்டும், வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற சிக்கல்கள்
எழுந்தன. இதையடுத்து, இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து, குறிப்பிட்ட
நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அரசு கலை கல்லூரியை, தற்காலிகமாக,
உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு கட்டடத்தில்,
துவக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பணிகள் நிறைவடைந்த உடன், கடந்த இரு மாதங்களுக்கு
முன், பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணக்கு (தமிழ், ஆங்கில
வழி), பி. எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., வணிகவியல் ஆகிய பாட
பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.
ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தலா 50 மாணவ, மாணவியர்
சேர்க்கப்பட்டு உள்ளனர். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவு
தவிர, மற்ற பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது.
இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி கல்லூரி துவங்கப்படும் என,
அறிவிப்பு வெளியானது.
ஆனால், பேராசிரியர்கள் நியமனத்தில் தாமதம், கட்டமைப்பு வசதி
மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கல்லூரி திறக்கப்படும் நாள்,
தொடர்ந்து தள்ளிப் போடப்படுகிறது. தற்போது, கல்லூரிக்கு, ஒரு முதல்வர்
உட்பட இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல்
பேராசிரியர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து, கல்லூரியில் சேர்ந்துவிட்டு, திறப்பிற்காக
காத்திருக்கும் மாணவர்கள் சிலர் கூறுகையில், "உத்திரமேரூர் அரசு கலை
கல்லூரியில் படிப்பதற்காக விண்ணப்பித்தோம். இடமும் கிடைத்து விட்டது.
இதுவரை வகுப்புகள் துவக்கப்படவில்லை. தினமும் கல்லூரிக்கு வந்து,
ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம்" என்றனர்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்வி துறை உயர்
அதிகாரி ஒருவர் கூறுகையில், "பேராசிரியர்கள் நியமனத்தில் தாமதம்
ஏற்பட்டுள்ளது. இதற்கான நேர்காணலில், தகுதியான நபர்களை தேர்வு செய்வதில்
சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், தேவையான பேராசிரியர்கள், பணியாளர்கள்
விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில், உத்திரமேரூர்
கல்லூரி உள்ளிட்ட, மாநிலத்தில் உள்ள 12 கல்லூரிகளை திறக்க ஏற்பாடுகள்
நடந்து வருகின்றன," என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...