ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆகஸ்ட் 5-ல் ஹால் டிக்கெட்:
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள்
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்யும் பணி
நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டும் 27 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள்
பல்வேறு பிழைகளுடன் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பங்களை பிழைகளுடன் பூர்த்திசெய்தவர்களுக்கும் நிபந்தனை
அடிப்படையில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என அவர்கள் மேலும்
தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதியும்,
இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு இந்த ஆண்டு மொத்தமாக 6.79 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
முதல் தாள் தேர்வுக்கு 2 லட்சத்து 68 ஆயிரம் பேரும், இரண்டாம் தாள்
தேர்வுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 794 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி கடந்த 4 வாரங்களாக நடைபெற்று
வந்தது. இப்போது ஸ்கேன் செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், தகுதித்
தேர்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த ஆண்டும் விண்ணப்பதாரர்கள் ஏராளமான பிழைகளுடன் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மேலும் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் 2,500 பேர் தாங்கள்
தேர்வு எழுத விரும்பும் ஊரைக் குறிப்பிடவில்லை. 1,400-க்கும் அதிகமானோர்
தங்களின் பிறந்த தேதியைக் குறிப்பிடவில்லை.
இரண்டாம் தாளில் கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் என தாங்கள் எழுத விரும்பும் தாளைக் குறிப்பிட வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இந்தத் தாளில் 7,800 பேர் இந்த விருப்பப் பாடத்தைக் குறிப்பிடவில்லை.
முதல் தாள், இரண்டாம் தாளில் மொத்தம் 17 ஆயிரம் பேர் தங்களது பிரதான மொழியைக் குறிப்பிடவில்லை.
இந்த ஆண்டு விண்ணப்பத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கும் தங்களது
பாலினத்தைக் குறிப்பிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலினத்துக்கான
பகுதியில் ஆண், பெண், திருநங்கை என இருக்கும். ஆனால், 44 விண்ணப்பதாரர்கள்
தங்களுக்கான பாலினத்தைக் குறிப்பிடவில்லை.
எனினும் இவர்கள் அனைவருக்கும் நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.