CSIR – UGC விரிவுரையாளர் தகுதித் தேர்வு பற்றிய முழு விவரங்கள்:
கல்லூரிகளில்
விரிவுரையாளர்களாக விரும்பும் மாணவர்களும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்
பெற்று ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் அறிவியல் பாட மாணவர்களும்
சிஎஸ்ஐஆர்- யுஜிசி நடத்தும் நெட் தேர்வை எழுத வேண்டும். தற்போது, பொறியியல்
பட்ட மாணவர்களும் எம்பிபிஎஸ் பட்ட மாணவர்களும் இத்தேர்வை எழுத
அனுமதிக்கப்படுகிறார்கள்.
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று
ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளவும் விரும்பும் மாணவர்கள் அறிவியல்
மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும்
சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும்.
ஜூன், டிசம்பர் மாதங்களில் அதாவது ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு
நடத்தப்படுகிறது. தற்போது வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி நடைபெறும்
தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஜேஆர்எஃப், லெக்சரர்ஷிப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜேஆர்எஃப்-க்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வயது வரம்பு அதிகமாக இருந்தால், அந்த மாணவர்கள் விண்ணப்பங்கள் லெக்சரர்ஷிப்-க்கு மட்டுமே பரிசீலனை செய்யப் படும். என்ஜினீயரிங் அறிவியல் மாணவர்களைப் பொருத்தவரை ஜேஆர்எஃப் எழுத மட்டுமே தகுதி படைத்தவர்கள். ஜேஆர்எஃப், லெக்சரர்ஷிப் ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனியே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
லைஃப் சயின்சஸ், எர்த்-அட்மாஸ்பெரிக்-ஓசன் அண்ட் பிளானிட்டரி சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், மேத்மேட்டிக்கல் சயின்சஸ், என்ஜினீயரிங் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்படும். காலையில் 9 மணியிலிருந்து 12 மணி வரையிலும் பிற்பகலில் 2 மணியிலிருந்து 5 மணி வரையிலும் இத்தேர்வு நடைபெறும். எந்தெந்தப் பாடப்பிரிவுகளுக்கு காலையிலும் எந்தெந்தப் பாடப்பிரிவுகளுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். என்ஜினீயரிங் சயின்சஸ் தவிர மற்ற பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, காரைக்குடி உள்பட பெங்களூரு, பவநகர், போபால், புவனேஸ்வரம், சண்டீகர், கொச்சி, தில்லி, குண்டூர், குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஐம்மு, ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், பிலானி, புனே, ராய்ப்பூர், ரூர்க்கி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், உதய்ப்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வை எழுதலாம்.
இந்தத் தேர்வை யார் எழுதலாம்?
பிஎஸ் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு, பி.இ.,பி.டெக். பி.பார்ம், எம்பிபிஎஸ், ஒருங்கிணைந்த பிஎஸ்-எம்எஸ் அல்லது எம்எஸ்சி படிப்புகள் அல்லது அதற்கு நிகரான படிப்புகளில் பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் இந்தப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி படிக்கச் சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி ஆனர்ஸ் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்.எஸ்.-பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தது 50 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல், பொறியியல் அல்லது வேறு பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பிஎச்டி அல்லது ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்பில் பதிவு செய்த பிறகுதான் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். விரிவுரையாளருக்கான நெட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜேஆர்எஃப்-நெட் தேர்வு எழுத விரும்புபவர்கள் 1-7-2013 நிலவரப்படி 28 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். விரிவுரையாளர் பணிக்கான நெட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.400. ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்குக் கட்டணம் ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தில் சலுகை பெற விரும்புபவர்கள் அதற்குரிய சான்றிதழின் நகலில் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்தியன் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணத்தை நேரடியாகச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, வங்கிச் செலான் மற்றும் உரிய உரிய இணைப்புகளுடன் Sr. Controller of Examination, Examintation Unit, HRDG, CSIR Complex, Library Avenue, Pusa, New Delhi - 110012 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். தொலைவில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.








