முன் மாதிரி கிராமத்தில் முன் மாதிரி அரசுப் பள்ளி-கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்:
உசிலம்பட்டி கட்டளைமாயன்பட்டி மக்கள், கிராமத்திற்கு தேவையானவற்றை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர். 2006ல் திறக்கப்பட்ட அரசு பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை கூட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.உசிலம்பட்டி ஒன்றியத்தில் நடுப்பட்டி கிராமத்தில் உள்ளது கட்டளைமாயன்பட்டி. உசிலம்பட்வத்தலக்குண்டு ரோட்டில் 7 கி.மீ., தூரத்தில் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்திற்கு ரோடு கிடையாது. அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் முன்வரவில்லை.
கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அடிப்படை தேவைகளை
தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்ள முடிவெடுத்தனர். முதல் கட்டமாக,
கிராமத்திற்கு செல்லும் ரோட்டை செப்பனிட்டனர். இருபுறமும் மரக்கன்றுகளை
நட்டனர். குளிக்க, குடிக்க தண்ணீர் தொட்டிகள், தகவல் தொடர்பிற்கு போன்
வசதியை ஏற்படுத்தினர்.
பள்ளியையே பார்த்திராத இக்கிராமத்தில், 2006ல் அனைவருக்கும்
கல்வித்திட்டத்தின் கீழ் 25 மாணவர்களைக் கொண்டு, கல்வி அதிகாரிகளின்
ஒத்துழைப்புடன் நடுநிலைப்பள்ளி ஆரம்பித்தனர். பள்ளிக்கென 40 சென்ட் இடத்தை
மக்கள் வாங்கிக் கொடுத்தனர். கட்டடம் கட்ட அரசு ரூ.6 லட்சம் ஒதுக்கியது.
கூடுதலாக ரூ.2.50 லட்சம் சேர்த்து வகுப்பறை, குடிநீர், கழிப்பறை என அனைத்து
வசதிகளுடன் கிராம மக்களே இணைந்து கட்டடம் கட்டினர். தற்போது இப்பள்ளியில்
65 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளிக்கு திருக்குறள் ஊழியம் இயக்கம் தொண்டு நிறுவனம்
சார்பில், மின்விசிறி, வட்ட மேஜைகள், அமரும் நாற்காலியிலேயே பெட்டி வசதி,
மின்விளக்குகள் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்: கிராமத்தில் குறைவான மக்கள்
தொகை இருப்பதால், அடிப்படை வசதிக்கு அரசு நிர்வாகத்தை எதிர்பார்க்கும் நிலை
இருந்தது. சரியான ரோடு இல்லாததால், கிராமத்திற்கு வாடகை வண்டிகள் கூட வர
தயங்கின. இதை மாற்ற, மக்களுடன் இணைந்து கிராமத்திற்கு தேவையான அடிப்படை
வசதிகளை நாங்களாகவே செய்து கொள்ள முயற்சி எடுத்தோம்.
ரோடு, குளியல் தொட்டி, ரோட்டோரம் மரங்கள் என நாங்கள் எடுத்த
முயற்சிக்கு அரசு அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்தனர். தற்போது சிறப்பான
பள்ளி கட்டடம், நல்ல கல்வி என கிடைப்பதால், பிற கிராம மாணவர்கள்கூட இங்கு
சேர்கின்றனர்.
தலைமை ஆசிரியர் பொற்செல்வன்: அரசு பள்ளி ஆசிரியர்கள்
என்றால், ஏனோ தானோவென இருக்கும் என்ற நிலையை மாற்ற முயற்சிக்கிறோம். தொண்டு
நிறுவனம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச நோட்டுகள், பேனா, பென்சில்
வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தரமான கல்வியை தர நாங்கள் முயற்சி செய்து
வருகிறோம் என்றார்.
திருக்குறள் ஊழியம் நிறுவனர் நாகப்பன்: நான் ஓய்வு பெற்ற
தபால் ஊழியர். பணியில் இருக்கும் போது, தமிழ் ஆர்வம் கொண்ட பணியாளர்களுடன்
இணைந்து, "திருக்குறள் ஊழியம்" என்ற அமைப்பை 2002ல் துவக்கினோம்.
முதலில், திருக்குறளின் சிறப்புகள் குறித்து கையேடுகள்
வழங்கினோம். தொடர்ச்சியாக, கிராமப்பகுதியில் உள்ள 35 பள்ளி மாணவர்களுக்கு
இலவச நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்கினோம்.
ஏதாவது ஒரு பள்ளியில் வசதிகளை மேம்படுத்த முடிவு செய்தபோது,
கிராம மக்களும், ஆசிரியர்களும் இணக்கமுடன் செயல்படும் கட்டளைமாயன்பட்டி
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை தேர்வு செய்தோம். முதல்கட்டமாக, ஒரு
வகுப்பறையில் மட்டும் வசதிகள் ஏற்படுத்தியுள்ளோம். அடுத்தடுத்த
வகுப்பறைகளுக்கும் இந்த வசதிகளை செய்ய கிராம மக்கள், ஆசிரியர்களுடன்
இணைந்து செயல்பட உள்ளோம், என்றார்.
மேலும் விபரங்களுக்கு 94420 62991ல் தொடர்பு கொள்ளலாம்.







