எம்.பி.பி.எஸ்.: இந்திய ஒதுக்கீட்டில் தமிழக கல்லூரிகளில் 60 காலியிடங்கள்:
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் இந்திய ஒதுக்கீட்டில் மொத்தம் 60 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.தமிழத்தில் சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த
எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு மத்திய சுகாதாரத் துறையின் கலந்தாய்வு மூலம்
நிரப்பப்படுவது வழக்கமாக உள்ளது.தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள்
2,555; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (15 சதவீதம்) அளிக்கப்பட்ட
இடங்கள் 383 ஆகும்; தமிழக ஒதுக்கீட்டுக்கு மீதமிருந்த 2,172 எம்.பி.பி.எஸ்.
இடங்கள் இரண்டு கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.
இப்போது அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 383 தமிழக எம்.பி.பி.எஸ்.
இடங்களுக்கு மூன்று கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதில் தமிழக அரசு
மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 60 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள்
ஏற்பட்டுள்ளன. இதே போன்று கர்நாடகம், கேரளம், குஜராத், அசாம் உள்ளிட்ட
பல்வேறு மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய
ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய
காலியிடங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை
மீண்டும் சமர்ப்பித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள 60 அகில இந்திய
ஒதுக்கீட்டு சமர்ப்பிப்பு காலியிடங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்
கல்லூரி அரங்கில் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு மேல் நடைபெற உள்ள
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 அரசு பிடிஎஸ் காலியிடங்கள்: சென்னை பாரிமுனையில்
உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 100 பி.டி.எஸ். இடங்கள்
உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 பி.டி.எஸ். இடங்கள்
அளிக்கப்படும். அவ்வாறு அளிக்கப்பட்ட 15 பி.டி.எஸ். இடங்களில், 5 இடங்கள்
மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
மீதமுள்ள 10 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்
கல்லூரி அரங்கில் நடைபெற உள்ள இறுதிக் கட்ட கலந்தாய்வு மூலம்
நிரப்பப்படும்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி வரும் 30-ஆம் தேதிக்குள்
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை
சென்னையில் இரண்டு கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம்
கட்ட கலந்தாய்வில் அனுமதிக் கடிதம் பெற்று விட்டு, அரசு மருத்துவக்
கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேராத மாணவர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள
காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள அரசு
ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல்
மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் ஆகியவை குறித்து
சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வரும் 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு கல்லூரிகளில் காலியிடங்கள் எவ்வளவு?
சென்னை, செப்.9: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மூன்று கட்ட கலந்தாய்வு
நடத்திய பிறகும்கூட, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி
ஆண்டில் (2013-14) ஏற்பட்டுள்ள 60 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் குறித்த
விவரம் கீழே அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலியிடங்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி
அரங்கில் செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு மேல் இறுதிக் கட்ட கலந்தாய்வு
நடைபெறும்.
மருத்துவக் கல்லூரி காலியிடங்கள்
எம்.எம்.சி. 3 (சென்னை)
அரசு ஸ்டான்லி 6
கீழ்ப்பாக்கம் 4
இ.எஸ்.ஐ.சி.
கே.கே. நகர் 5
செங்கல்பட்டு 1
திருச்சி 1
தஞ்சாவூர் 2
மதுரை 1
கோவை 2
திருநெல்வேலி 3
தேனி 2
தூத்துக்குடி 4
கன்னியாகுமரி 1
வேலூர் 3
விழுப்புரம் 3
தருமபுரி 2
திருவாரூர் 3
சிவகங்கை 8
திருவண்ணாமலை 6
அரசு பல் மருத்துவக் கல்லூரி 10








