விவேகானந்தர் ரதயாத்திரைக்கு சென்னை மெரீனாவில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில்
ராமகிருஷ்ணா மடம் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் ரதயாத்திரை
நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்துக்கான ரதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை
தொடங்கியது.
இந்தநிலையில் மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலை
அருகே திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ரதயாத்திரை வந்தடைந்தது. அப்போது
பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப்பிரமுகர்கள் விவேகானந்தர் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கிறிஸ்துவம், இஸ்லாமியம்,
புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து அகில இந்திய வானொலி நிலைய அரங்கத்தில் இதுகுறித்து
நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னைக்கான அமெரிக்க துணைத்தூதர் ஜெனிபர்
மெர்க்கின்டயர் மற்றும் ஜெர்மன் துணைத் தூதர் ஸ்டீபன் வெக்பேக் ஆகியோர்
கூறியது: இந்திய ஆன்மிகத்தின் மிகச் சிறந்த அடையாளமாக விவேகானந்தர்
விளங்குகிறார். உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்களும்
பின்பற்றும் அளவுக்கு அவரது கருத்துக்களும், கோட்பாடுகளும் முக்கியத்துவம்
வாய்ந்தவை.
எழுச்சிமிகு கருத்துக்கள், அறிவுரைகள், ஆன்மிகப் பணிகள் மூலம்
கோடிக்கணக்கான இளைஞர்களை ஈர்த்துள்ள விவேகானந்தர் என்றும்
போற்றுதலுக்குரியவர். ஆன்மிகம் மட்டுமல்லாமல் சமுகப் பணிகளில் இளைஞர்கள்
ஈடுபடுவதன் மூலம் தேசத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த முடியும் என்று
நடைமுறை வாழ்க்கையில் மெய்ப்பித்தவர். ஒவ்வொரு மனிதனும் தான் இறந்த
பின்னும் தன்னை நினைவுபடுத்தும் ஏதாவது ஒரு அடையாளத்தை அதாவது நற்பணியை
வாழும் போதே செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற மேன்மையான கருத்தை
அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றனர்.
அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன்
பேசியது: விவேகானந்தரை வங்காளம் பெற்றெடுத்ததென்றால் தமிழகம் அவரை
தத்தெடுத்துள்ளது. சிகாகோவில் தனது உரையை முடித்துவிட்டு கொழும்புவுக்கு
வந்து அங்கிருந்து ராமநாதபுரத்துக்கு விவேகானந்தர் வந்தபோது
ராமநாதபுரத்தின் மன்னர் வரவேற்கச் சென்றார். அப்போது அவர், "உங்கள் பாதத்தை
தரையில் வைக்க வேண்டாம் என் தலையில் வையுங்கள்' என்று சுவாமிஜியிடம்
கூறினார். அந்தளவுக்கு புனிதமானவர் சுவாமி விவேகானந்தர்.
எந்த ஒரு காரணத்திலும் நான் "சகித்துக்கொள்கிறேன்' என்ற வார்த்தையைப்
பயன்படுத்தக்கூடாது. அது வேண்டா வெறுப்புடன் கூறுவதாக அமைந்து விடும். எனவே
"நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள், அப்போது
கேட்பவர்களின் மனதை வருடிச்செல்லும் என்ற விவேகானந்தர் அறிவுரையை அனைவரும்
தங்களிடம் பெற்றோர்களிடம் பேசும்போது நினைவில் கூறவேண்டும் என்றார்
ராமசுப்பிரமணியன். சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கௌதமானந்தர்,
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ஒடிஸா மாநில
முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன், ஆர்க்காடு நவாப் முஹமது அப்துல்
அலி, பிரம்மஞான சபையின் துணைத்தலைவர் எம்.பி.சிங்கல், முன்னாள் தலைமை
தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மடத்தைச் சேர்ந்த பத்மாஸ்தானந்தர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
22 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம்
விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கருத்துக்களை மக்களிடையே பரப்பவும், இளைஞர்களிடம் எழுச்சியூட்டவும் ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி கோவையில் ரதயாத்திரை தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரதயாத்திரை நடைபெற்றது.
விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கருத்துக்களை மக்களிடையே பரப்பவும், இளைஞர்களிடம் எழுச்சியூட்டவும் ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி கோவையில் ரதயாத்திரை தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரதயாத்திரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இதுவரை 796 பள்ளிகள், 244 கல்லூரிகளுக்கு சென்றுள்ள
இந்த ரதத்தை மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 19 லட்சத்து 56,739 பேர் ரதத்தை
பார்வையிட்டுள்ளனர். மேலும் 2,233 இடங்களுக்கு சென்றுள்ள ரதம் மொத்தம் 22
ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
தொடங்கிய ரதயாத்திரை ஜனவரி 8-ஆம் தேதி வரை முக்கிய இடங்களுக்குச் செல்ல
உள்ளது. அதைத் தொடர்ந்து ரதம் மீண்டும் கோவை சென்றடையும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...