ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என தேசிய
தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்போதாவது
இந்தச்சலுகையை முதல்வர் வழங்குவாரா? என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி
எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண்
சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை
எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் மீது நடவடிக்கை என்றால் அரசு மீது
மறைமுகமான குற்றச்சாட்டு என்றுதான் பொருளாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 90 மதிப்பெண் பெற வேண்டும்.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி
விகிதம் குறைவாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி இருந்தனர். எனவே,
குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது தேர்ச்சி மதிப்பெண்ணில்
சலுகை வழங்கப்படும் என எதிர்பார்த்தபோதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில்
எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்
ஆகியோருக்கு உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சி
மதிப்பெண்ணாக தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலுக்கு விரோதமானது ஆகும். அதன் வழிகாட்டுதலின்
படி, ஆந்திரப் பிரதேசத்தில் உயர் வகுப்பினருக்கு 60,
பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண்ணும்,
அசாமில் உயர் வகுப்பினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்ணும்,
ஒரிசா மாநிலத்தில் உயர் வகுப்பினருக்கு 60, பிற வகுப்பினருக்கு 50 சதவீத
மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும்
தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என நிர்ணயித்துள்ளது என்பது பெரியாரின் சமூக
நீதி கொள்கைக்கு எதிரானது. இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் விரோதமானது
ஆகும்.
2013 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்விலாவது
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் செய்ய
வேண்டும் என கோரினேன். ஆனால், இதை அதிமுக அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ்
கஜேந்திரபாபு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு
மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை
மண்டல இயக்குநருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரை ஆய்வு செய்த வெங்கடேசன் தமிழக அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் வழிகாட்டுதலை ஏற்று தமிழக
அரசு வெளியிட்டுள்ள அரசாணை 181-ல், ஆசிரியர் தகுதித் தேர்வில்
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது என்றும்,
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை
வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...