அரசு ஆதிதிராவிடர்
நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில்,
'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர்
பெருமாள்பட்டி ராமர் தாக்கல் செய்த மனு: நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்
சேர்ந்த மாற்றுத்திறனாளி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர்கள்
நியமனத்திற்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்
அழைப்பு விடுத்தது.
'அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம், ஆதிதிராவிடர்
வகுப்பை சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. காலிப்பணியிடம் எதுவும்
இல்லை,' என ஆக.,21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நியமனங்களில்
இடஒதுக்கீடு பின்பற்றவில்லை. ஆதிதிராவிடர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்
என விதிகளில் குறிப்பிடவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருந்தால்,
எனக்கு வேலை கிடைத்திருக்கும். ஆசிரியர்களை (669 பேர்) நியமித்ததாகக்கூறி
வெளியான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி வழங்க உத்தரவிட
வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல் வி.சசிக்குமார் ஆஜரானார்.
நீதிபதி உத்தரவு:
பணி நியமனங்களைப் பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும். பள்ளிக்
கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அக்., 14 ல் பதில்
மனு செய்ய, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது







