தொழில் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 40 சதவீதம்
அதிகரிக்கப்படும் என, தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ.ஐயாக்கண்ணு
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிகரிக்கப்பட்டுள்ள ஊக்கத் தொகையின்படி தொழில் பயிற்சி பெறும் பொறியியல்
பட்டதாரிகளுக்கு ரூ.4,984 வழங்கப்படும். இதேபோல் பட்டப்படிப்பு, பட்டயப்
படிப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.3,542-ம், பிளஸ் 2 வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு ரூ.2,758-ம் வழங்கப்படும். இதற்கான ஆணையை மத்திய அரசு கடந்த
23-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
மாதம்தோறும் அளிக்கப்படும் ஊக்கத் தொகையில் 50 சதவீதம் பயிற்சி அளிக்கும்
தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு தொழில் பயிற்சி வாரியம் மூலம்
வழங்கப்படும். கடந்த நிதியாண்டில் இந்த வாரியம் ரூ.33 கோடியை
வழங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.50 கோடி வழங்கப்படும்.
நிகழாண்டு, ஐந்தாண்டு திட்டத்தில் தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் 5
லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளும்.
இணையதளம் மூலம் அழைப்புக் கடிதம்: தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள்,
பட்டதாரிகள் தொழில்பயிற்சி பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை தற்போது
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு உற்பத்தி,
விநியோக நிறுவனம், தமிழ்நாடு ஒலிபரப்பு கழகம் ஆகியற்றின் தொழில்
பயிற்சிக்கான தேர்வுகளில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு
வேலூரில் திங்கள்கிழமை (பிப்.2) முதல் சனிக்கிழமை (பிப்.7)-ஆம் தேதி வரை
நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக்
கடிதத்தை ஜ்ஜ்ஜ்.க்ஷர்ஹற்-ள்ழ்ல்.ஸ்ரீர்ம் என்ற இணையதள முகவரியில் பெற்றுக்
கொள்ளலாம். மற்ற மாவட்டங்களுக்கான தேர்வு அட்டவணை குறித்த தகவல்கள் இந்த
இணையதளத்தில் வெளியிடப்படும்.
கிராமப்புற மாணவர்கள் தடையின்றி தொழில் பயிற்சி பெறும் வகையில்
ஒருங்கிணைந்த நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. திருவண்ணாமலை,
ஆத்தூர் பகுதிகளில் இந்த மாதத்தில் நேர்காணல் நடைபெறும் என்றார்.