கர்நாடகாவில், 10ம் வகுப்பு தேர்வில், கடந்த ஆண்டை போன்றே, இந்தாண்டும்
மாணவியரே முதல் இடம் பிடித்துள்ளனர். இம்முறை, 81.82 சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில், 3,038 தேர்வு மையங்களில், கடந்த
மார்ச் 30 முதல், ஏப்., 13ம் தேதி வரை, 10ம் வகுப்பு தேர்வு நடந்தது.
தேர்வு முறைகேடில் ஈடுபட்டதாக, 36 மாணவர்கள் பிடிபட்டனர். கடந்த ஏப்.,
18ல், 210 மையங்களில் வினாத்தாள் திருத்தும் பணி துவங்கியது. 65 ஆயிரம்
ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டு
தேர்வில், 81.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
உடுப்பி முதலிடம்:
வழக்கம் போல், மாணவர்களை விட, மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவியர், 86.23 சதவீதமும், மாணவர்கள், 77.85 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த ஆண்டு, 16வது இடத்தில் இருந்த உடுப்பி, முதலிடத்தையும்;
முதலிடத்தில் இருந்த சிக்கோடி, இரண்டாவது இடத்தையும்; எட்டாவது இடத்தில்
இருந்த உத்தரகன்னடா, மூன்றாவது இடத்தையும், 13ம் இடத்தில் இருந்த கதக்,
கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. மொத்தம், 625 மதிப்பெண்களுக்கு, 623
மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே முதல் இடத்தை மாணவர் விஸ்வஜித்
ஹெக்டேயும்; திஷா ஹெக்டே, சம்ஹிதா ராவ், ஸ்வாதி, ரிதுவர்ணா தேஷ்முக் ஆகிய
நான்கு மாணவியரும், 622 மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடம் பெற்றுள்ளனர்.
தேர்வில் தோல்வியடைந்தவர்கள், ஜூன் 15ம் தேதியில் இருந்து, 22ம் தேதி வரை
நடக்கும் மறு தேர்வில் பங்கேற்கலாம். இதற்குரிய அனுமதி கடிதம், அந்த பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படும். மறு தேர்வு எழுதும் மாணவர்கள்,
இம்மாதம் 21ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தோல்வியடைந்த
மாணவர்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் 23ம் தேதிக்குள், தேர்வு
ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மறு தேர்வு எழுதுவோர், ஒரு
பாடத்துக்கு, 200 ரூபாயும், இரு பாடங்களுக்கு, 250 ரூபாயும், மூன்று,
அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு, 315 ரூபாயும் செலுத்த வேண்டும். மறு கூட்டல்
தேவைப்படும் மாணவர்கள், வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க
வேண்டும்.
40 வயதுடைய....
மறு கூட்டல், போட்டோ காப்பி கோருவோர், ஒரு பாடத்துக்கான மறு கூட்டலுக்கு,
150 ரூபாய், ஒரு பாடத்துக்கான போட்டோ காப்பிக்கு, 300 ரூபாய், மீண்டும்
திருத்த, ஒரு பாடத்துக்கு, 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பத்தாம்
வகுப்பு தேர்வில், தனியாக தேர்வு எழுதிய, 40 வயதுடைய, 370 பேரில், ஏழு பேர்
மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காமராஜர் பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி:
பெங்களூரு தமிழ் சங்கம், காமராஜர் பெயரில், உயர்நிலைப் பள்ளி நடத்தி
வருகிறது. இப்பள்ளி சார்பில், இந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 26
மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்; இதில், 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டில், தமிழகத்திலிருந்து, 10ம் வகுப்புக்கு தேர்வு எழுத வந்த மாணவி
ஒருவர், கன்னட பாடத்தில் தேர்ச்சி பெறாததால், இப்பள்ளி, 100 சதவீத
தேர்ச்சி பெற இயலாமல் போனது. தமிழ் பாடத்தில், 125 மதிப்பெண்ணுக்கு, 123
மதிப்பெண் பெற்று, காமராஜர் உயர்நிலைப் பள்ளி மாணவி கோமதி, சாதனை
படைத்துள்ளார்; இவரது தந்தை, கட்டட தொழிலாளியாகவும், தாயார் வீட்டு வேலை
செய்தும் வருகின்றனர்.