என்ஜினீயரிங் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 538 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் வருடந்தோறும் கலந்தாய்வை நடத்தி வருகிறது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்ததா? என்று பார்க்கும் வசதி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரேண்டம் எண்
மேலும் ரேண்டம் எண் 15-ந் தேதியும், ரேங்க் பட்டியல் 19-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களின் விண்ணப்பம் தான் தகுதியானவை ஆகும்.
விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு 28-ந் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.
பொது கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது
மாணவ-மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் கலந்து கொள்வார்கள். இந்த கலந்தாய்வு ஜூலை 31-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் செய்து வருகிறார்.
கலந்தாய்வு ஏற்பாடு குறித்து பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்கள் கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்து எடுக்கலாம். எந்த கல்லூரியில் இடம் உள்ளது என்ற விவரம் ஆயிரம் பேர் உட்காரக்கூடிய இடத்தில் திரையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த இடம் பெரிய கூடாரம் போல அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் குடிநீர் வசதி, மின்விசிறிகள் ஆகியவை செய்யப்பட்டு இருக்கும்.
மேலும் கழிப்பிட வசதி போதுமான அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவை அனைத்தும் கலந்தாய்வுக்கு முன்பாக முடிந்துவிடும்.
மாணவ-மாணவிகளுக்கு எந்த வித குறைவும் இல்லாமல் இருக்க கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.








