பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம் சார்பில் "ஹிந்து தர்ம ஞானம்'- அஞ்சல்வழிக் கல்வி ஓராண்டுப் படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எந்த நாட்டில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாகக் கற்பிக்கிறார்களே அந்த நாடு முன்னேறும். ஆசிரியர்கள்தான் அச்சாணிகள், அவர்கள் முகமலர்ச்சியுடன் கற்பிக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் இருந்து கற்பதுதான் இந்து தர்மம். இந்து தர்மம் என்பது நம்முடைய உயிரணுக்களில் இருக்கிறது.
அமெரிக்காவில் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்ட நேரத்திலும் கூட இந்துக்கள் பாதிக்கப்படவில்லை. காரணம், அவர்களின் சேமிப்புப் பழக்கம். "உருவாகு, பின்னர் உருவாக்கு' என்பதுபோல, நாம் முதலில் ஆன்மிகக் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
நாம் உணவருந்தும்போது, விதைத்தவன் முதல் சமைத்தவன் வரை அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். அவ்வாறு நன்றி கூறாமல் உணவு சாப்பிட்டால், சதைக்கு பலம் ஏற்படுமே தவிர, நரம்பில் பலம் இருக்காது. எனவே, உண்பதற்கு முன் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு உண்ண வேண்டும். இறைவனுக்கு அர்ப்பணித்து உண்டால் அது பிரசாதமாக இருக்கும். இல்லையேல் அது வெறும் சாதமே.
நாம் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கைகூப்பி வணங்க வேண்டும். அவ்வாறு இதயப்பூர்வமாக வணங்கும்போது, அன்பும் அறிவும் ஒன்றிணைக்கப்படும்.
தற்போது நம்முடைய பல பழக்க வழக்கங்களை மேலைநாட்டினர் புது வண்ணம் பூசிப் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றுதான் தோப்புக்கரணம். தற்போது இதை அவர்கள் "சூப்பர் பிரெய்ன் யோகா' என்று கூறி, அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். நாமோ அதை தண்டனைக்குரிய ஒன்றாக்கி வைத்திருக்கிறோம். எனவே, நாம் நம்முடைய பாரம்பரியத்தில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு, அந்த நல்ல விஷயங்களைச் செய்ய தேர்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என ஒவ்வொருவரும் நம்ப வேண்டும் என்றார்.
பச்சையப்பன் கல்லூரியின் தத்துவவியல் துறை முன்னாள் தலைவர் கே.சம்பத்குமார்: நாட்டைத் தாயாக பாவித்து, கடவுளாக வணங்கினால்தான் இந்து முழுமை ஆகிறான். மேலைநாட்டில் மதம் என்றால் வெறும் நம்பிக்கை என்பார்கள். ஆனால், அது வெறும் நம்பிக்கை அல்ல. முன்னர் மதத்தை பிரதானப்படுத்தி, பிறவற்றை அத்துடன் சேர்த்து கற்றுக் கொடுத்தனர். தற்போதைய நிலை அவ்வாறில்லை. இன்றைய தலைமுறையினர் ஒன்றை நம்புவதற்கு முன் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அவர்களுக்குத் தகுந்த பதிலளிக்க வேண்டியது நமது கடமை.
சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் டீன் எல்.எஸ்.கணேஷ்: வாழ்க்கையில் போராட்டம், வலி என்பது இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் பலத்தைக் கொடுப்பது தர்மம். ஒருவரது பெயருக்கும் நம்பிக்கைக்கும், தொடர்பில்லை. பெயர் என்பது ஒரு "லேபிள்' அவ்வளவுதான். பலர் இனிமைக்கும், நன்மைக்கும் இடையிலான வேறுபாடுகளை அறிவதில்லை. அதை அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக தர்ம ரக்ஷண சமிதியின் மாநில பொதுச் செயலர் பி.கணபதி வரவேற்றார். டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் முன்னாள் முதல்வர் நரசிம்மன் தலைமை வகித்தார்.
"தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், ஹெச்.சி.எல், நிறுவனத்தின் கூடுதல் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ச.நரேஷ் பாபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.








