பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள்
தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அளித்துள்ள கோரிக்கை
மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் தமிழ் பாடத்தை 3, 4 ஆம் பாட வேளையாக
வைத்துள்ளனர். எனவே, தாய்மொழியான தமிழை முதல் பாட வேளையாக நடைமுறைப்படுத்த
வேண்டும்.
பட்டதாரி ஆசிரியரான இளையோருக்குப் பின்னால் பணிமூப்பு தமிழாசிரியர் பெயர்
எழுதுவதைத் தடுக்க, கல்வித் துறைக்கு வலியுறுத்த வேண்டும். மாணவர் வருகைப்
பதிவேடுகள் சில பள்ளிகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் பெயர் தமிழிலும், தந்தை பெயர் முன் எழுத்து
(இனிஷியல்) ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் பள்ளி
சார்ந்த வருகை மற்றும் அலுவலகப் பதிவேடுகளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு
வருகின்றனர்.
இந்நிலையை, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வு செய்து, தமிழில் எழுதும்
நிலையை நடைமுறைப்படுத்த வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படும்
மாற்றுச் சான்றிதழில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டு வருகின்றன. முதலில்
தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் எழுத வலியுறுத்த வேண்டும். பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் வழங்கப்படும் மதிப்பெண்
பட்டியலில் மாணவர் பெயர், பள்ளிப் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு
செய்யப்படுகின்றன. தமிழிலும் பதிவு செய்ய பள்ளித் தேர்வுத் துறைக்கு
வலியுறுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.